குடும்பத்திற்காக ஒரு பெண் கஷ்டப்படுகிறாள் என்ற
கதையின் விமர்சனத்தைக் கேட்டதும், நான் பார்த்த திரைப்படம் அரங்கேற்றம் (1973). அப்போது
நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இளம் வயதிலேயே குடும்பப்பொறுப்பு என்பதை
உணர்த்தி நாங்கள் வளர்க்கப்பட்டதால் இப்படம் என்னை ஈர்த்துவிட்டது என நினைக்கிறேன்.
பார்த்துவிட்டு திரையரங்கிலிருந்து வெளியில் வந்தபோது அன்னியோன்னியமானவரை விட்டுப்பிரிந்து
வருவதைப் போல உணர்ந்தேன்.
கதையின் நாயகியான லலிதாவிற்கு மட்டுமல்ல, முதன்முதலாக
நான் பார்த்த பாலசந்தரின் திரைப்படம் என்ற வகையிலும் எனக்கு அரங்கேற்றம்தான். குடும்ப
நிலையின் காரணமாக பணிக்குச் சென்று, காலச்சூழலால் தடம்மாறி தன்னையே இழந்த லலிதாவை ஒரு
தாயாகவோ, சகோதரியாகவோ, மகளாகவோ நினைக்க முடிந்ததே தவிர ஒரு கதாபாத்திரமாக நினைக்கமுடியவில்லை,
இன்றுவரை. நான் விரும்பிப்பார்த்த, இன்னும் பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில்
முதன்மையானது இத்திரைப்படம்.





