31 August 2019

செங்கல்மேடு : 25 ஆகஸ்டு 2019

25 ஆகஸ்டு 2019 அன்று அரியலூர் மாவட்டத்தில் உடையாளர்பாளையம் வட்டத்தில் ஒரு புத்தர் சிலையைக் காண்பதற்காக முனைவர் ம.செல்வபாண்டியன் திரு க.ரவிக்குமார் ஆகியோருடன் களப்பணி மேற்கொள்ளத் திட்டமிட்டோம். பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் என்று மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து கிளம்பி கங்கைகொண்டசோழபுரத்தை அடுத்துள்ள குறுக்கு ரோட்டில் ஒன்றுசேரத் திட்டமிட்டோம். 

நான் தஞ்சாவூரிலிருந்து காலை 5.00 மணி வாக்கில் பேருந்தில் புறப்பட்டு திருவையாறு, திருமானூர் வழியாக கீழப்பழுவூர் சென்று அங்கிருந்து பிறிதொரு பேருந்தில் ஜெயங்கொண்டம், கங்கைகொண்டசோழபுரம் வழியாக குறுக்கு ரோட்டினை வந்துசேர்ந்தேன். காலை உணவை குறுக்கு ரோட்டில் உள்ள உணவு விடுதியில் உண்டுவிட்டுக் காத்திருந்தபோது, பேருந்து கிடைப்பதில் தாமதமானால் அவர்கள் வர நேரமாகும் என்பதை அறிந்தேன்.

காத்திருக்கும் நேரத்தில் அருகில் வேறு ஏதாவது சிறப்பு பெற்ற இடத்திற்குச் செல்ல திட்டமிட்டேன். அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு பல முறை சென்று வந்தவகையில், திரு செல்வபாண்டியனிடம் வேறு ஏதாவது இடமிருக்கிறதா என்று கேட்டபோது அவர் செங்கல்மேட்டில் மிக அரிய சிற்பங்கள் இருப்பதாகக் கூறினார். விசாரித்தபோது குறுக்கு ரோட்டிலிருந்து சாலையைக் கடந்து சுமார் 1.5 கிமீ தொலைவில் அவ்விடம் இருந்ததை அறிந்தேன். 

அங்கிருந்து நடந்தே சென்றேன். விசாரித்தபோது அங்கு மேலச்செங்கல்மேடு, கீழச்செங்கல்மேடு என இரு பகுதி இருப்பதாகக் கூறினர். இரு இடங்களிலும் கோயில்கள் இருப்பதாகக் கூறினர். சிறிது சென்ற பாதையிலிருந்து வலப்புறம் பிரிகின்ற மற்றொரு பாதை வழியாக முதலில் மேலச்செங்கல்மேடு சென்றேன். அங்கிருந்த கோயிலில் சிற்பங்கள் எவையும் காணப்படவில்லை. விசாரித்தபோது ஐந்தாறு சிற்பங்கள் உள்ள கோயில் கீழச்செங்கல் மேட்டில் உள்ளதாகக் கூறினர்.

மேலச்செங்கல்மேட்டிலிருந்து கீழச்செங்கல்மேட்டிற்கு ஒற்றையடிப்பாதை வழியாக செல்லலாம் என்று கூறி வழிகாட்டினர். அவ்வழியாக சுமார் 1 கிமீ நடக்க ஆரம்பித்தேன். வெயிலின் உக்கிரம் சற்று அதிகமாக இருந்தபோதிலும் அழகான சிற்பங்களைப் பார்க்கப்போகின்ற ஆவலில் அது தெரியவில்லை.



நடந்து கோயிலை அடைந்தபோது அங்கு தொல்லியல் துறையின் அறிவிப்புப் பலகையினைக் கண்டேன்.



முதலாம் இராஜேந்திர சோழனின் வெற்றியின் அடையாளமாகக் கலிங்க நாட்டிலிருந்து (தற்போதைய ஒரிஸ்ஸா மாநிலத்தின் வட பகுதி) கொண்டுவரப்பட்ட, அழகான சிற்பங்களை அங்கு காணமுடிந்தது.  அச்சிற்பங்கள் செந்நிற மணற்கல்லால் ஆனவை என்றும் கலிங்க நாட்டு கலைப்பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அவை அமைந்துள்ளன என்று தெரிவிக்கும் வகையில் தமிழக அரசின் தொல்லியல் துறையின் அறிவிப்புப்பலகை இருந்தது. அங்கிருந்த வீரமகாகாளி கோயில் வளாகத்தில் இச்சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன.

கோயில் இரு பிரிவாகக் காணப்பட்டது. பெரிய கொட்டகையுடன் உள்ள பகுதியில் ஒரே ஒரு பெரிய காளி சிற்பம் இருந்தது. அச்சிற்பம் தஞ்சாவூரில் உள்ள நிசும்பசூதனியைவிட பெரியதாகத் தோற்றமளித்தது. சிறிய கொட்டகையில் பிற சிற்பங்கள் இருந்தன. அரண்மனையையும், கோட்டைகளையும் அமைப்பதற்காக செங்கல் சூளை அமைக்கப்பட்ட இடம்தான் செங்கல்மேடு என்றழைக்கப்படுவதாகவும், இங்குள்ள காளியை வீரமாகாளி என்றழைப்பதாகவும், தமிழகத்தில் இதுவே பெரிய காளி என்றும் அங்கிருந்தோர் கூறினர்.










கோயிலின் எதிரில் பெரிய குளம் காணப்பட்டது. அந்த வெயிலில் குளத்திலிருந்து வந்த காற்று இதமாக இருந்தது. சற்று நேரம் அதனை ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன், மறுபடியும் நடைபயணமாக குறுக்குரோட்டை நோக்கி. நான் சேர்வதற்கும் அவ்விரு ஆய்வாளர்களும் வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது. அனைவரும் தேநீர் அருந்திவிட்டு, புத்தர் சிலையைத் தேடிப் போவதற்காக விசாரிக்க ஆரம்பித்தோம். புத்தர் சிலை உள்ள இடம் பள்ளிப்பாளையம் என்றும், குறுக்குரோட்டிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ளதாகக் கூறினர். அடுத்த பயணம் தொடர்ந்ததைப் பற்றி பிறிதொரு பதிவில் காண்போம்.

அமைவிடம் : கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள குறுக்கு ரோட்டிலிருந்து சுமார் 1.5 கிமீ தொலைவில், மேலச்செங்கல்மேடு என்னும் பகுதியை அடுத்து கீழச்செங்கல்மேடு உள்ளது. ஆட்டோவிலோ, மகிழ்வுந்திலோ, நடந்தோ செல்லலாம்.  

நன்றி : தகவலைத் தந்து உதவிய நண்பர் முனைவர் ம.செல்வபாண்டியன்

23 August 2019

திருவாதவூர் திருமறைநாதர் கோயில்

திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற பழமொழி திருவாசகத்தின் பெருமையினையும், அதனை இயற்றிய மாணிக்கவாசகரையும் நினைவுபடுத்தும். அவருடைய சன்னதியைக்கொண்ட திருமறைநாதர் கோயிலுக்கும், அவர் பிறந்ததாகக் கூறப்படும் இடத்திற்கும் சென்றது மறக்கமுடியாத அனுபவமாகும். 

மதுரை மாவட்டத்தில் மதுரையின் வடக்கே சுமார் 25 கிமீ தொலைவில் உள்ளது திருவாதவூர். அங்கு புகழ்பெற்ற திருமறைநாதர் கோயிலுக்கு 9 ஜனவரி 2019 அன்று சென்றிருந்தோம். ஐந்து நிலைகளைக் கொண்ட நெடிதுயர்ந்த ராஜகோபுரம் கோயிலின் பிரம்மாண்டத்தை உணர்த்துகிறது.



ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது முதலில் நம் கண்களில் படுவது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மண்டபம். அந்த மண்டபம் மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்டது என்றும், இந்த இடத்தில் இருக்கும்போதுதான், மாணிக்கவாசகருக்கு தன் பாதச் சிலம்பொலியைக் கேட்கச் செய்தார் சிவபெருமான் என்றும் கூறுவர்.

இம்மண்டபத்தில் சிவன், தன் கால் சிலம்பொலியை சைவ சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் கேட்கச் செய்ததாகக் கூறுவர்.  இக்கோயிலின் சிறப்பாக இம்மண்டபத்தைக் கூறுவர். அழகான கொடுங்கைகளுக்கும், சிற்பத்தூண்களுக்கும் பெயர் பெற்ற மண்டம். வாதவூரார் என்றழைக்கப்பட்ட மாணிக்கவாசகப்பெருமான் பாண்டிய மன்னனின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். சிவனே குருவாக வந்து இவரிடம் உபதேசம் கேட்ட பெருமையினைக் கொண்டவர்.
மூலவர் திருமறைநாதர் கிழக்கு நோக்கியுள்ளார். இறைவியை ஆரணவல்லி என்றும் திருமறைநாயகி என்றும் கூறுவர். இறைவியின் சன்னதியில் உள்ள கொடுங்கைகளும் வேலைப்பாடுகளோடு அமைந்துள்ளன. கோயிலின் கிழக்கில் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது.  



திருச்சுற்றில் மாணிக்கவாசகருக்கான தனி சந்நதி அமைந்துள்ளது. இங்குள்ள நடராஜர் சன்னதி வேலைப்பாடுகளோடு அமைந்துள்ளது.    

கோயிலின் வெளியில் சாலையின் எதிர்புறத்தில், சிறிது தூரத்தில் மாணிக்கவாசகர் பிறந்த இடம் அமைந்துள்ளது. நுழைவாயிலுடன் அழகான சிறிய கோயில் மாணிக்கவாசகருக்காக அமைக்கப்பட்டுள்ளது.  





நன்றி : விக்கிபீடியா, தினமலர் கோயில்கள்,சக்தி விகடன்
நன்றி : பயணத்தின்போது புகைப்படம் எடுக்க உதவிய என் மனைவி திருமதி பாக்கியவதி
  


17 August 2019

விக்கிபீடியாவில் 700ஆவது பதிவு

6 ஜுலை 2014இல் தமிழ் விக்கிபீடியாவில் எழுதத் தொடங்கி, அண்மையில்  700 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன். முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதைப் போல ஒவ்வொரு முறையும் வித்தியாசமான அனுபவம் கிடைப்பதை உணர்கிறேன். கடைசியாக எழுதப்பட்ட 100 பதிவுகளின் பின்புலத்தினைப் பார்ப்போம்.

மைசூர் பயணத்தின்போது பல இடங்களுக்குச் சென்றுவந்தோம். அவற்றில் ஒன்றான நேரில் நாங்கள் பார்த்த மெழுகு அருங்காட்சியகம் பற்றி எழுதி, உரிய படங்களை இணைத்தேன்.
பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் அரிச்சந்திரபுரம் என்ற இடம் உள்ளது. அங்குள்ள சந்திரமௌலீஸ்வரர் கோயிலில் 24 நவம்பர் 2017இல் குடமுழுக்கு நடைபெற்றதை நாளிதழ் செய்தி வழியாக அறிந்தேன். 28 நவம்பர் 2017இல் அங்கு சென்று கோயிலைப்புகைப்படம் எடுத்து, உரிய விவரங்களைத் திரட்டினேன். அப்போதுதான் அது ஒரு தேவார வைப்புத்தலம் என்பதை அறிந்தேன்.
கடந்த 10 வருடங்களாக வெளிநாட்டு இதழ்களைப் படித்துவரும் நிலையில் தமிழ் விக்கிபீடியாவில் இல்லாத சில இதழ்களைப் பற்றி பதிவுகளைப் பதிந்தேன். அவ்வகையில் டான், தி கார்டியன் வீக்லி, தி சன், போன்ற இதழ்களைப் பற்றி சுருக்கமாகப் பதிந்தேன்.



தமிழகத்தில் நடைபெறுகின்ற முக்கிய விழாக்களில் ஒன்று பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் நடைபெறுகின்ற முத்துப்பந்தல் விழாவாகும். வைகாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுவது திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் முத்துப்பந்தல் அளிப்பதாகும். திருஞானசம்பந்தப்பெருமான் அடியார் கூட்டத்தோடு வரும்போது நண்பகலாக இருக்கும். வெப்பம் அதிகமாக இருந்ததை அறிந்த இறைவன் தன் பூத கணங்களை அனுப்பி அவருக்கு முத்துப்பந்தல் அளித்து அவரை அழைத்து வருமாறு கூறுவார். 15 ஜுன் 2018 அன்று நடைபெற்ற முத்துப்பந்தல் விழாவிற்கு நேரில் சென்று, ஞானசம்பந்தப்பெருமானுடன் வந்த அடியார் கூட்டத்துடன் சென்று பின்னர் தேனுபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் கலந்துகொண்டேன். வந்த மறுநாளே விக்கிபீடியாவில் பதிவினை எழுதினேன். 
திருச்சிராப்பள்ளியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையம் தன் 80ஆவது அண்டு துவக்க விழாவினை 16 மே 2018இல் கொண்டாடியதாக நாளிதழில் படித்தேன். அச்செய்தியினையும், பிற தொடர்புடைய செய்திகளையும் இணைப்பாகத் தந்து திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தைப் பற்றி ஒரு பதிவினைத் தொடங்கினேன்.
அதுபோலவே சென்னையில், இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட திரு கு.மகாலிங்கம் (87) என்பவரால் ஒரு நூலகம் சிறப்பாக நடத்தப்பட்டு வருவதையறிந்தேன். நாளிதழ் செய்தியின் அடிப்படையில் அதிலிருந்த செய்திகளை மேற்கோளிட்டு மகாத்மா காந்தி நூல் நிலையம் என்ற தலைப்பில் புதிய பதிவினை ஆரம்பித்தேன்.
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணியன் அவர்கள் 4 அக்டோபர் 2018இல் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அடுத்த நாளில் 5 அக்டோபர் 2018இல் அவரைப் பற்றிய பதிவினை எழுதினேன். 

நிகழ்வு நடைபெறும் நாளன்றே பதிவினைத் தொடங்கிய வித்தியாசமான அனுபவம் ஒற்றுமைக்கான சிலை பதிவைப் பற்றியதாகும். 31 அக்டோபர் 2018 அன்று பிரதமர் நரேந்திர மோடி, சர்தார் படேலின் சிலையைத் திறந்துவைத்தார். அன்று தமிழ் விக்கிபீடியாவில் அச்சிலை பற்றிய விவரம் உள்ளதா என்று தேடியபோது இல்லாததால் அன்றே ஆங்கில விக்கிபீடியாவில் இருந்த கட்டுரையினை நேரடியாக மொழிபெயர்த்து, ஒற்றுமைக்கான சிலை என்ற பதிவினைப் பதிந்தேன். 
சற்றொப்ப அதே வகையில் ஆரம்பிக்கப்பட்டது 11.11.11. என்ற தலைப்பில் அமைந்ததாகும். முதல் உலகப்போரில் ஜெர்மனிக்கும் அதற்கெதிரான கூட்டுப்படைகளுக்கிடையில் போர் நிறுத்தம் ஏற்பட கையொப்பமிடப்பட்ட நிகழ்வே அது. அந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 1918ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் காலை 5.45க்கு பிரான்சில் கையொப்பமிடப்பட்டு, அன்று பகல் 11.00 மணிக்கு செயல்பாட்டிற்கு வந்தது. அதனால் அதனை 11.11.11 என்றழைப்பர். தமிழில் இவ்வாறே 11.11.11 என்ற தலைப்பிட்டு, நூற்றாண்டு நினைவு நாளின் அடுத்த நாளான 12 நவம்பர் 2018இல் எழுத ஆரம்பித்தேன். பின்னர் சக விக்கிபீடிய நண்பர்கள் இத்தலைப்பினை போர் நிறுத்த நினைவு நாள் என்று மாற்றினர்.

தேவார வைப்புத்தலங்கள் பற்றிய பதிவுகளில் இல்லாத கோயில்களுக்கு புதிய பதிவு எழுதும் பணியையும், முன்னரே பதிவிட்டிருந்தனவற்றை மேம்படுத்தும் பணியையும் இக்காலகட்டத்தில் மேற்கொண்டேன். அதற்கு அடிப்படையாக பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதிய தேவார வைப்புத்தலங்கள் (வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009) நூலை எடுத்துக்கொண்டேன். அதில் 147 தலங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதனை வகைப்படுத்தி, உரிய வார்ப்புரு தந்ததோடு, அந்தந்த கோயில்களின் பெயரை இணைத்தேன்.
ஆங்கில விக்கிபீடியா அனுபவம்
விக்கிபீடியாவில் நேரடியாக கட்டுரைகளைப் பதியவும், வரைவிற்கு அனுப்பி பின்னர் அது தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டுரை வடிவம் பெறும் வசதியும் உள்ளது. ஆங்கில விக்கிபீடியாவில் பெரும்பாலும் நேரடியாகவே கட்டுரையினைப் பதிந்துவருகிறேன். 
நேரடிப்பதிவு நீக்கம்
அவ்வகையில் 2015இல் தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் பற்றி (Brihadeeswarar Temple Car Festival) நேரடியாக எழுதியிருந்த பதிவு, போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீக்கப்பட்டது. 
வரைவு, கட்டுரை வடிவம் பெறல்
பிறிதொரு முறைப்படி 2017இல் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலைப்பற்றி (Thukkachi Abatsahayesvar templeஎழுதி வரைவு ஒப்புதலுக்கு (draft for approval) அனுப்பியிருந்தேன். சக விக்கிபீடியர்கள் கேட்ட சில கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் மறுமொழி கூறிய பின்னர் அப்பதிவு கட்டுரை வடிவம் பெற்றது. 
பதிவு, வரைவாக மாற்றப்படல்
5 ஜுலை 2019இல் Agastheeswaram Agastheeswarar Temple என்ற தலைப்பில் பதியப்பட்ட ஒரு பதிவானது, 14 ஜுலை 2019இல் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வரைவாக மறுபடியும் ஆக்கப்படுவதாகவும், மேலும் கூடுதல் விவரங்களைத் தந்து கட்டுரையை செழுமைப்படுத்தவேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது. அதனை மறுபடியும் கூடுதல் விவரங்களுடன் மேம்படுத்தியுள்ளேன். தட்டச்சு செய்த பதிவு வரைவாவது இம்முறைதான். வரைவு நிலையிலிருந்து இயல்பு நிலைக்கு அப்பதிவு திரும்பும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். 



ஆங்கில விக்கிபீடியாவில் நான் எழுதிய கட்டுரைகளில் 20 கட்டுரைகள் மதிப்பீடு செய்யப்பட்டதாக 23 ஆகஸ்டு 2019 அன்று மின்னஞ்சல்கள் பெறப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ் விக்கிபீடியாவில் உள்ள தேவார வைப்புத்தலங்கள் தொடர்பானவையாகும். ஒரே நாளில் இவ்வாறாக மதிப்பீடு செய்யப்படுவது இதுதான் முதல் முறையாகும்.

என் எழுத்துப்பணிக்குத் துணைநிற்கும் சக விக்கிபீடியர்கள், வலைப்பூ நண்பர்கள், பிற நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.


விக்கிபீடியா தொடர்பான பிற பதிவுகள்: 

10 August 2019

இராஜராஜ சோழர் 1034ஆவது முடிசூட்டுப்பெருவிழா : 3 ஆகஸ்டு 2019

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் இராஜராஜ சோழர் முடிசூட்டுப் பெருவிழா மற்றும் தமிழர் கலை, பண்பாட்டுப் பெருவிழா 3 ஆகஸ்டு 2019 அன்று காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை அழைப்பிதழில் கண்டுள்ளவாறு சிறப்பாக நடைபெற்றது. 





இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் வாய்ப்பினை சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவினர் வழங்கியிருந்தனர். சிறப்புரை தொடங்குவதற்கு முன்பாக எம்பெருமானையும், அன்னையையும் சன்னதியில் சென்று வணங்கினேன். 






தொடர்ந்து துவக்கவிழா தொடங்கவிருந்த நடராஜர் மண்டபம் வந்துசேர்ந்தேன். விழாவிற்காக வந்திருந்த குழு நண்பர்களிடம் திரு உதயசங்கர் அறிமுகப்படுத்தினார். 

மிகவும் சிறப்பாக நிகழ்ச்சி நிரலின்படி நிகழ்வுகள் தொடங்கின. தென்னகப்பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர் எம்.சுப்பிரமணியம் அவர்கள் தலைமை வகித்தார். இவ்வாறான நிகழ்வுகள் நடத்தப்படவேண்டியதன் அவசியத்தையும், தென்னகப்பண்பாட்டு மையம் நம் வரலாற்றுப்பெருமைகளை வெளிக்கொணரும் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்கும் என்பதையும் தலைமையுரையில் எடுத்தரைத்தார். தஞ்சை தமிழ்ச்சங்கத்தலைவரும், தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் கட்டடக்கலைத்துறைப் பேராசிரியருமான முனைவர் தெய்வநாயகம், திருவையாறு அரசர் கல்லூரியின் முன்னாள் முதல்வரான பேராசிரியர் முனைவர் சண்முக.செல்வகணபதி ஆகியோர் உரையாற்றினர். சொற்பொழிவாளர்கள் தம் உரையில் பெரிய கோயிலின் சிறப்பையும், மன்னனின் மாண்பினையும் உரைத்ததுடன், இளைய தலைமுறையினர் இவ்வாறான விழாக்கள் மூலமாக நம் பண்பாட்டை முன்எடுத்துச்செல்வதையும் பாராட்டினர். 

 (வலமிருந்து) ஜம்புலிங்கம், பேராசிரியர் தெய்வநாயகம், முனைவர் எம்.சுப்பிரமணியம், திரு உதயசங்கர்
சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு நிறைவு செய்து அரை நூற்றாண்டு காலமாக பௌத்தம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள ராஜராஜனுக்கும் பௌத்தத்திற்கும் இடையேயான தொடர்பினைப் பற்றிச் சிறப்புரையாற்றினேன்.  
கருவறை தென்புறவாயிலின் படிக்கட்டில் புத்தர் சிற்பம்

ராஜராஜனின் திருவாயிலில் புத்தர் சிற்பம்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் புத்தர் சிற்பங்கள், புத்தர் ஓவியம், நாகப்பட்டின புத்த விகாரை கட்டுவதற்காக ராஜராஜசோழன் அனுமதி தந்தமை, கடந்த 25 ஆண்டு களப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 70 புத்தர் சிலைகளில் பெரும்பாலானவை ராஜராஜசோழன் காலத்தைச் சார்ந்தவையாகவோ அதற்குப் பின்னுள்ள காலத்தைச் சார்ந்தவையாகவோ உள்ளமை என்ற நிலைகளில் விவாதப் பொருள் அமைந்தது. 





பேராசிரியர் சண்முக செல்வகணபதியுடன் திரு உதயசங்கர்
தென்னகப் பண்பாட்டு மையம், சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, தஞ்சை தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து இவ்விழாவில் கலந்துகொண்டு, உரையாடியது சிறிது நேரமாக இருந்தாலும் அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக என்னை விழாவிற்கு அழைத்த திரு உதயசங்கர் அவர்களுக்கும், சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குழு உறுப்பினர்களின் ஆர்வமும், ஈடுபாடும் என்னை பிரமிக்க வைத்தன. 1990களின் ஆரம்பத்தில் நான் பௌத்த ஆய்வில் தடம் பதித்த காலத்தில் இருந்த ஆர்வத்தினை அவர்களிடம் கண்டேன். அடுத்து கும்பகோணம் செல்ல வேண்டியிருந்ததால் பிற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இயலா நிலையில். நண்பர்களிடம் பிரியாவிடை பெற்று அங்கிருந்து புறப்பட்டேன்.

சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவினர் தம் முகநூல் பக்கத்தில் விழா தொடர்பான பிற புகைப்படங்களைப் பகிர்ந்திருந்ததோடு, அடுத்த ஆண்டில் இராஜராஜனின் 1035ஆவது முடிசூட்டு விழாவினை இன்னும் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தனர். அவர்களுடைய ஆய்வுத்தேடலும், பணியும் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்புரைக்குப் பின் வரலாற்றுச்சிறப்புகளை விளக்கும் மரபு நடை, மங்கள நாதஸ்வரம், வீணை, நாட்டியம் உள்ளிட்ட தமிழர் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் தொடர்பாக குழு நண்பர்கள் வெளியிட்டிருந்த புகைப்படங்களில் சிலவற்றைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவர்களுக்கு நன்றியுடன்.   












புகைப்படங்கள் நன்றி :  சோழ மண்டல வரலாற்றுத்தேடல் குழு முகநூல் பக்கம்