28 July 2018

கோயில் உலா : 21 ஜுலை 2018

21 ஜுலை 2018 அன்று குடும்பத்தாருடன் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுக்கும், மங்களாசாசனம் பெற்ற தலங்களுக்கும் கோயில் உலா சென்றேன். இவற்றில் திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில், கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில் (24.12.2016)திருமீயச்சூர் மேகநாதசுவாமி கோயில், கூத்தனூர் சரஸ்வதி கோயில், திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில் (17.3.2018), ஆகிய கோயில்களுக்கு முந்தைய கோயில் உலாக்களின்போதும், பிற கோயில்களுக்கு பிற பயணத்தின்போதும் சென்றுள்ளேன். அகஸ்தீஸ்வரர் கோயிலும், தூவாத நாயனார் கோயிலும் இப்பயணத்தில் நான் முதன்முதலாக பார்த்த கோயில்களாகும்.

திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில் 
கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில் 
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில்
அகஸ்தீஸ்வரர் கோயில்
திருமீயச்சூர் மேகநாதசுவாமி கோயில்
கூத்தனூர் சரஸ்வதி கோயில்
திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் கோயில்
திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் கோயில்
திருவாரூர் தியாகராசர் கோயில்
திருவாரூர் தூவாத நாயனார் கோயில்

திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில் 
(தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம்)
மூலவர் நீலகண்டேஸ்வரர், இறைவி அழகாம்பிகை. நாவுக்கரசர் பாடல் பெற்ற இத்தலம் மார்க்கண்டேயர் சிரஞ்சீவி பெற்ற தலமென்று கூறுகின்றனர். பழைய ஆகம விதிப்படி நவக்கிரக சன்னதி அமைக்கப்பட்டுள்ளதாகவும், எல்லாக் கிரகங்களும் தங்களுக்கான சக்தியை சூரியனிடமிருந்து பெறுவதாகவும் கூறுகின்றனர். அனைத்து கிரகங்களும் சூரியனை நோக்கி அமைந்துள்ளன. திருவையாறு சப்தஸ்தானம் கேள்விப்பட்டுள்ளோம். அதைப்போல இங்கும் சப்தஸ்தானப் பல்லக்கு விழா சித்திரை மாதத்தில் நடைபெறுகிறது.

கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில் 
(கும்பகோணம்-காரைக்கால் சாலையில் எஸ்.புதூரை அடைந்து அங்கிருந்து வலப்புறமாகத்திரும்பி சென்று கூட்டு ரோட்டை அடைந்து பின்னர் இடப்புறமாக 1 கிமீ சென்றால் கோயிலை அடையலாம்)
மூலவர் உமாமகேஸ்வரர், இறைவி அங்கவளநாயகி. ஞானசம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்ற இக்கோயில் திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கோயிலின் உபகோயிலாகும். திருநல்லம் என்னும் பெயர் பெற்ற இக்கோயில் உயர்ந்த நடராஜர் சிலைக்குப் புகழ் பெற்றது. மூலவர் உமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும்,  அங்கவளநாயகி கிழக்கு நோக்கியும் உள்ளனர்.

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் 
(திருவாரூர் மாவட்டம்)
அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தரால் பாடப்பட்ட இக்கோயிலின் மூலவராக சேசபுரீஸ்வரர் உள்ளார். மூலவர் சன்னதியை அடுத்து தனியாக வண்டார்குழலி சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு மேல் சட்டநாதர் உள்ளார். சில சிவன் கோயில்களில் சட்டநாதரைக் காணமுடியும். மூலவர் சன்னதியிலிருந்து வெளியே வந்தபின் மூலவர் சன்னதிக்கு வலப்புறம் மலையீஸ்வரர் சன்னதி உள்ளது.

அகஸ்தீஸ்வரர் கோயில் 
(கொடியலூர், நன்னிலம் வட்டம்,  திருவாரூர் மாவட்டம்)
பயணத்தின்போது திருமீயச்சூருக்கு முன்பாக ஒரு கோயிலைக் கண்டோம். பாடல் பெற்ற கோயிலாகவோ, வைப்புத்தலமாகவோ இருக்கும் என்று நினைத்தோம். இருக்கும் என நினைத்தோம். ஆனால் அவ்வாறில்லை. மூலவர் சன்னதிக்கு முன்பாக வலது புறம் எமதர்மராஜனும், இடது புறம் சனீஸ்வர பகவானும் உள்ளனர். மூலவராக அகஸ்தீஸ்வரர் உள்ளார். மூலவர் சன்னதிக்கு இடது புறம் ஆனந்தவல்லி சன்னதி உள்ளது. சனீஸ்வர பகவானும், எமதர்மராஜாவும் பிறந்த தலமென்று குறிப்புகள் வைத்துள்ளனர்.

திருமீயச்சூர் மேகநாதசுவாமி கோயில் கோயில் 
ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இக்கோயிலின் மூலவர் மேகநாதசுவாமி ஆவார். இங்குள்ள சேத்திரபுராணேஸ்வரர் சிற்பம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். உள்ளூரில் இறைவியின் பெயரில் லலிதாம்பிகை கோயில் என்றழைக்கின்றனர். 

இக்கோயிலின் மூலவர் சன்னதியின் இடது புறம் திருமீயச்சூர் இளங்கோயில் எனப்படுகின்ற கோயில் உள்ளது. மூலவர் சகலபுவனேஸ்வரர் ஆவார். திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகையில் இவரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. மூலவர் சன்னதிக்கு இடது  புறம் மின்னும் மேகலையாள் உள்ளார். ஒரு கோயில் வளாகத்தில் இரு கோயில்களைக் காண்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

கூத்தனூர் சரஸ்வதி கோயில் 
(திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் அருகேயுள்ளது)

குடமுழுக்கு நிறைவுற்றபின் சரஸ்வதியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. திருச்சுற்றில் பெற்றோர், தம் குழந்தைகளை அழைத்துவந்து எழுதப் பழக்கப்படுவதைக் காண முடிந்தது.

திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் கோயில் 
(நாகப்பட்டினம் மாவட்டம்)

திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயிலின் எதிரே குளம் உள்ளது. குளத்தையொட்டி ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் ஆழ்வார் ஆச்சாரியார் சன்னதி, உபரி சரவசு சன்னதி, விபீஷணாள்வார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கண்ணபுர நாயகி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. இக்கோயிலைப் பார்த்தபோது திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில் நினைவிற்கு வந்தது. உடன் அக்கோயிலுக்கு அங்கிருந்து கிளம்பினோம்.

திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் 
(குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்)

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயிலின் மூலவர் உப்பிலியப்பன் கோயில் மூலவரைவிட சற்று உயரமாக இருப்பதைக் காணமுடிந்தது. இக்கோயிலின் குளம் தொடங்கி கோயில் அமைப்பு முழுவதும் திருக்கண்ணபுரத்தைப் போலிருந்தன. 

திருவாரூர் வன்மீகநாதர் கோயில்
காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள, நால்வராலும் பாடல் பெற்ற தலமாகும். இந்த அளவிற்கு தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாது என்பதுபோலத் தோன்றுகிறது. மூலவர் வன்மீகநாதர். இறைவி கமலாம்பிகை. சப்தவிடங்கத்தலங்களில் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. 33 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இக்கோயிலில் ஒன்பது ராஜ கோபுரங்களும், 80 விமானங்களும், 12 பெரிய மதில்களும், 13 மிகப்பெரிய மண்டபங்களும், 15 தீர்த்தக்கிணறுகளும், மூன்று நந்தவனங்களும், மூன்று பெரிய பிரகாரங்களும், 365 லிங்கங்களும் உள்ளன. 100க்கும் மேற்பட்ட சன்னதிகளையும், 86 விநாயகர் சிலைகளையும், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்களையும் இக்கோயில் பெற்றுள்ளது. இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும். (நன்றி விக்கிபீடியா) 
மூலவர் சன்னதியின் இடது புறம் ஆரூ அறநெறி என அழைக்கப்படுகின்ற அசலேஸ்வரர் சன்னதி உள்ளது. இறைவி வண்டார்குழலி. இது அப்பர் பாடல் பெற்றதாகும். ஒரே கோயிலுக்குள் இரு கோயில்கள் என்ற நிலையில் இக்கோயில் உள்ளது. 
திருவாரூர் தூவாத நாயனார் கோயில்
பரவையுண்மண்டளி என்றழைக்கப்படுகின்ற தூவாத நாயனார் கோயில் திருவாரூர் கீழ வீதியில் உள்ளது. மூலவர் தூவாய்நாதர் ஆவார். இறைவி பஞ்சின் மெல்லடியம்மை ஆவார். இது சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும்.
  
துணை நின்றவை
  • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
  • சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005
  • பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 
  • விக்கிபீடியா

நன்றி
உடன் வந்து புகைப்படங்கள் எடுக்கவும், செய்திகள் திரட்டவும் உதவி செய்த என் மனைவி திருமதி பாக்கியவதி, என் மகன் திரு சிவகுரு. சென்ற நினைவாக எங்களின் சில புகைப்படங்கள்.


கோனேரிராஜபுரம் கோயிலில்

திருக்கண்ணபுரம் கோயிலில்

திருமீயச்சூர் கோயிலில்

13 comments:

  1. படங்களுடன் அருமையான தகவல்

    சைவமும் தமிழும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல...
    கோவில் வரலாற்றுடன் தமிழ் இணைந்திருக்கும்.
    இவற்றைத் தொகுத்து நூலாக்க வேண்டும் ஐயா! அது உலகத் தமிழருக்கு அறிவூட்டும் வரலாற்று நூலாக வேண்டும்.
    என்னால் மின்நூல் ஆக்கித்தர முடியும்.

    ReplyDelete
  2. கோவில்களை உங்களுடன் சேர்ந்து நாங்களும் சுற்றி வந்தோம். படங்கள் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  3. மீண்டும் முன்பு பார்த்த கோவில்களை தரிசனம் செய்தேன்.
    படங்கள் எல்லாம் அழகு.
    நன்றி.

    ReplyDelete
  4. மயிலாடுதுறை புஷ்கரணிக்கு போகும்போது திருப்பாம்புரமும், அகத்தியர் கோவிலும் பார்க்கமுடியாம போகிட்டுது. அந்த குறை இன்று போனது

    ReplyDelete
  5. சிறப்பான கோவில் உலா.... உங்களால் நாங்களும் பலன் பெற்றோம். நன்றி ஐயா.

    ReplyDelete
  6. கோயில் உலா தெய்வீகமாக இருந்தது. கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் குடமுழுக்கா?.. கூடவே ஒட்டக்கூத்தரின் நினைவும் வந்தது.

    ReplyDelete
  7. தங்களால் நாங்களும் தரிசித்தோம் தொடரட்டும் ஆன்மீக பயணங்கள்.

    ReplyDelete
  8. கோவில்கள் பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் மிகவும் அருமை!

    ReplyDelete
  9. வணக்கம். அருமையான பதிவு. இந்த கோயில்களுக்கு சென்று வந்தது போல் உள்ளது உங்களது உலா. உலா தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. கடைசிப் படத்தில் உங்கள் பின்புலத்தில் இருக்கும் சிற்பம் மனதைக் கவர்கிறது. அதனைப் பற்றிக் குறிப்பிடவில்லையே.

    நாகை சவுரிராஜப் பெருமாள் கோவில் உள்புறம் (நுழையும்போது இடது புறம்) அல்லவா குளம் அமைந்திருக்கிறது. எதிரே குளம் இருக்கிறது என்று எழுதியிருக்கீங்களே

    சுற்றுலாவை மிகவும் ரசித்தேன். நல்ல தரிசனம். அந்த அந்த்க் கோவிலின் காலங்களையும் (எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது) போட்டிருக்கலாம்.

    ReplyDelete
  11. பின்புல சிற்பத்தைப் பற்றி தனியாக பதிவு எழுதிவருகிறேன். திருக்கண்ணபுரத்திலும், திருக்கண்ணமங்கையிலும் கோயிலின் எதிரில் குளம் சற்றொப்ப ஒரே மாதிரியாக உள்ளது. நாம் செல்லும்போது நமக்கு இடது புறம் குளத்தையும், வலது புறம் கோயிலையும் காணமுடியும். நடுவே சாலை உள்ளது. இருந்தாலும் கோயில் வளாகத்திற்கு வெளியே, சாலையை அடுத்து குளம் உள்ள நிலையில் தெளிவாக தெரிவதற்காகக் குறிப்பிட்டுள்ளேன். நுழையும்போது இடப்புறமாக இருந்தாலும், கோயிலின் பார்வையிலிருந்து எதிரில் உள்ளதை அவ்வாறு கூறியுள்ளேன். காலங்கள் நிலையில் பல மாறுபட்ட கருத்துகள் உள்ளதால் தவிர்க்கிறேன்.

    ReplyDelete
  12. திரு மீயச்சூர் என்றால் நினைவுக்கு வருவதுலலிதாம்பிகை கோவில்தான் முன்பெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதுபார்க்காத கொவில்களுக்குக் கிளம்பி விடுவோம் இப்போது நினைதாலும் முடிவதில்லை கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்கும் சென்றிருக்கிறோம் திருவாரூர் கோவிலுக்கும்சென்றிருக்கிறோம்

    ReplyDelete
  13. திருமியச்சூர் கோயில் உலா அருமை ஐயா. படங்களும் தகவல்களும் அருமை..

    துளசிதரன்

    ஐயா படங்களும் கோயில் உலா செகுசிறப்பு. திருமியச்சூர் என்றதும் எனக்கு கவிநயா அம்மாவின் (பதிவர்) திருமியச்சூரில் திகழ்ந்திடும் தேவி ஸ்ரீலலிதாம்பிகையே பாடல்தான் நினைவுக்கு வரும்..வந்தது.

    கீதா

    ReplyDelete