24 October 2020

எங்கள் ஆசிரியர் பி.கே.

கும்பகோணத்தில் 1972-75இல் நாங்கள் பயின்ற அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் திரு பி.கல்யாணசுந்தரம் (பி.கே) அவர்கள் இயற்கையெய்திய செய்தி எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.



பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடுவது தொடர்பாக 14 ஜுலை 2019 அன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் அவருக்கு அருகில் அமர்ந்து விழாத்தொடர்பாகவும், அக்காலகட்ட நினைவுகளையும் பகிர்ந்துகொண்ட இனிய தருணங்களை வாழ்வில் மறக்கவும் முடியுமா? பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த கூட்டங்களின்போது அவரைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.

நாங்கள் படித்துக்கொண்டிருக்கும்போது ராஜராஜசோழன் திரைப்படம் வெளியானது. அப்போது அவர் ராஜராஜ சோழனைப்போல மீசையை சில நாள் வைத்திருந்தார். சிவாஜி கணேசனின் நடிப்பைப் பற்றி வகுப்பில் அவர் பேசியது இன்னும் நினைவிலிருக்கிறது. அதனைப் பற்றி அவரிடம் நினைவுகூர்ந்தபோது வியந்தார். மேடையில் என்னை ஜம்பு சார் என்றபோது மிகவும் சங்கடத்தில் ஆழ்ந்தேன். ஜம்புலிங்கம் என்றழையுங்கள் என்றபோது, அப்போது மாணவன் என்ற வகையில் சரி. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நீங்கள் நல்ல நிலையில் பணியாற்றி பணிநிறைவு பெற்று எழுத்துத்துறையிலும், ஆய்விலும் செயல்பட்டு வருகின்றீர்கள். நூற்றாண்டு விழாவிற்கு உங்களைப் போன்றோரின் பங்களிப்பு முக்கியமாக உள்ளதை நான் அறிகிறேன். உங்களைப் போன்றோரை என் மாணவர் என்று சொல்வதில் எனக்குப் பெருமையாக உள்ளது ஜம்பு சார் என்றாரே பார்க்கலாம். தொடர்ந்து பேசி அவரை, என்னை ஜம்புலிங்கம் என்று அழைக்கும்படி பேச வைத்துவிட்டேன்.

ஆசிரியரைப் போலன்றி, ஒரு நண்பரைப் போலவே பழகியவர். அவருடைய சுறுசுறுப்பு, எதையும் சாதிக்க வேண்டும் என்ற ஆவல், பல துறைகளில் ஈடுபாடு, அருமையான நட்பு வட்டம், அரசியல் ஈடுபாடு, மாற்றுக்கருத்துக் கொண்டோரிடமும் அன்புடன் நடந்துகொள்ளும் பாங்கு என்ற வகையில் அவருடைய பெருமைகளை கூறிக்கொண்டே இருக்கலாம். சொல்லாலும், செயலாலும் எங்களை அனைத்து வகையிலும் ஈர்த்தவர்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் மறுபடியும் அவரைச் சந்தித்த பின்னர் கும்பகோணத்திற்குச் செல்லும்போதெல்லாம் பிற நண்பர்களைப் பற்றி விசாரிக்கும்போது இவரைப் பற்றியும் விசாரிப்பதும், பேசுவதும் தொடர ஆரம்பித்தது. 

நீங்கள் காட்டிய வழியில் நேர்மையுடன் நடந்து எங்கள் பயணத்தைத் தொடர்வோம் ஐயா.

(புகைப்படம் : 14 ஜுலை 2019 அன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் திரு பி.கே.உரையாற்றுகிறார். அருகில் அமர்ந்திருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த பெரும் பேறு)




5 comments:

  1. ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  2. தங்களது ஆசிரியரின் மறைவுக்கு எமது அஞ்சலிகள்.

    முதலில் இருக்கும் புகைப்படம் அரிய பொக்கிஷம் என்பது என்னால்கூட உணர முடிகிறது.

    ReplyDelete
  3. தங்களின் குருவிற்கு என் அஞ்சலிகளை சமர்ப்பித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  4. தங்கள் ஆசிரியரின் மறைவிற்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள்.
    //14 ஜுலை 2019 அன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் அவருக்கு அருகில் அமர்ந்து விழாத்தொடர்பாகவும், அக்காலகட்ட நினைவுகளையும் பகிர்ந்துகொண்ட இனிய தருணங்களை வாழ்வில் மறக்கவும் முடியுமா?//

    பொக்கிஷமான நிகழ்வு ஐயா.

    கீதா

    ReplyDelete