09 June 2018

இந்திய ரயில்வேயின் ஆன்மீகச் சுற்றுலா : கார்டியன்

அண்மையில் அலைச்சறுக்கினைப் பற்றி கார்டியன் இதழில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பினைக் கண்டோம். இப்பதிவில் ஹைதராபாத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ள ரயில் பயணம் பற்றிய கட்டுரையின் மொழிபெயர்ப்பினைக் காண்போம்.

இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவு ஒவ்வொரு ஆண்டும் பாரத் தர்ஷன் என்ற சுற்றுலாவை நடத்துகிறது. இலட்சக்கணக்கான இந்துக்கள் முக்கியமான சமயம் சார்ந்த இடங்களுக்குச் செல்ல இச்சுற்றுலா உதவுகிறது.  ஒரு நாளைக்கு ரூ.1000 என்ற நிலையில் இச்சுற்றுலாக் கட்டணத்தில் போக்குவரத்து, தங்கும் வசதி, சைவ உணவு, தேவையான அளவு தேநீர் உள்ளிட்டவை அடங்கும். ஹைதராபாத்திலிருந்து தொடங்கிய என் (Richard Eilers, கட்டுரையாளர்) ஏழு நாள் பயணம் தமிழ்நாடு வரை தொடர்ந்தது. பல அருமையான கோயில்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

ஒரு வாரமாக கிட்டத்தட்ட 800 பயணிகளுடன் பயணிக்கின்றபோதிலும் அவர்களுடன் உரையாட முடியாதது எனக்குக் குறையே. நடைமேடையில் காத்திருந்தபோதுகூட நான் சற்றே பரபரப்போடு இருந்தேன்.  அவ்வப்போது பேரிறைச்சல்களும், சிரிப்புகளும், வெளிச்சமும் என்னை விழிக்கவைத்தன. ரயில்வேப்பெட்டி முழுவதும் பெட்டிகளும் பைகளுமாக இருந்தன. என் அருகே அமர்ந்தவர்கள் ஹைதராபாத்தின் தென் பகுதியில் புகைவண்டியில் ஏறியவர்கள். அவர்கள் என்னை வித்தியாசமாகப் பார்த்தனர். எங்களின் முதல் நிறுத்தம் அங்கிருந்து 1000 கிமீ தொலைவிலுள்ள திருச்சி.

காலை 6.00 மணிவாக்கில் தேநீர் விற்கும் சிறுவன் சூடான பிளாஸ்டிக் கோப்பையில் தேநீரைத் தந்தான்.  பிறகு காலை உணவின்போது எங்களின் அறிமுகம். என் அருகில் இருந்த 13 பேர் கொண்ட குடும்பத்தார் என்னை உற்றுநோக்கியபடியே இருந்தனர். அக்குடும்பத்தின் தலைவர் நல்ல ஆங்கிலத்தில், எங்களுக்கு நெருக்கமாக இருங்கள். நான் சொல்வதைக் கவனித்துக்கொள்ளுங்கள். பின்னர் எந்த சிக்கலும் இருக்காது,” என்றார். இருந்தாலும் புகைவண்டி தாமதமாக வருவதற்கு அவரால் ஒன்றும் செய்ய முடியாது.

அடுத்த நாள் காலை பல மணி நேர தாமதத்திற்குப் பிறகு திருச்சி வந்தடைந்தோம். எங்களது பயணத்தின் முதல் தரிசனத்தை நிறைவு செய்ய சற்றே சிரமப்படும் நிலை. மிகவும் ஈடுபாட்டோடு அனைவரும் தரிசனம் செய்ததைக் காண முடிந்தது. கோயில்களில் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே தரிசனம் அனுமதிக்கப்படுவதால் சில நொடிகள் மட்டுமே தெய்வத்தைக் காண்பதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கவேண்டியுள்ளது.  அலைந்து திரித்த பேருந்துகள் எங்களை அங்கிருந்து சில மைல் தூரத்தில் உள்ள திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துச் சென்றது. அங்கு அரங்கநாதருக்கான பெரிய கோயிலைக் கண்டோம்.  என் உடன் வந்தவர்கள் முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நிற்க ஓடினார்கள். இந்து அல்லாத நிலையில் கருவறையில் நான் அனுமதிக்கப்படாதததால் (சில கோயில்கள் இந்து அல்லாதோரை அனுமதிக்கின்றன. சில அனுமதிப்பதில்லை) அப்பெரிய கோயிலின் பிரகாரங்களையும், விமானங்களையும், சன்னதிகளையும் பார்த்தேன்.  சென்றிருந்த பயணிகள் சில மணி நேரத்தில்  வெற்றிகரமாகத் திரும்பினர். தமக்குள் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு பேருந்தில் ஏறினர். பெண்கள் பக்திப்பாடல்களை உச்சரிப்பதைக் காணமுடிந்தது.   அருகிலிருந்த ஒரு இளம் மாணவர் தரிசனத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அவர்களுடைய பெற்றோர் விவசாயிகள் என்றும், வங்கியில் கடன் பெற்று இக்கோயில்களைக் காண வந்ததாகவும், அவர்களைப் பொறுத்தவரை அது பெரிய தொகை. இருந்தாலும் அந்த கோயில்களைக் காண்பதை அவர்கள் பெருமையாக நினைக்கின்றார்கள்” என்றும்  கூறினார்.

திட்டமிடப்பட்ட நிலையில் வசதியான இரவுகள், பாண்ட்ரி காரில் தயாரிக்கப்பட்ட உணவுகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய்கள், சுத்தமான குளியலறைகள் என்ற வகைகளோடு பயணம் தொடர்ந்தது.
 இயல்புக்கு மாறானதும் வியப்பையும் தந்தது ராமேஸ்வரத்திலுள்ள இராமநாதஸ்வாமி கோயில். அங்கு பக்தர்கள் கடலில் குளித்துவிட்டு அப்படியே உள்ளே வந்து கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் (கிணறுகளும் குளங்களும்) குளிக்கின்றார்கள். அங்கிருந்து நீர் சிறிய வாளி மூலமாக இறைக்கப்பட்டு தெளிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நனைந்த ஆடையுடன் சற்றே இருட்டாகக் காணப்படுகின்ற அந்த வளாகத்தினைச் சுற்றி வருவதைக் காணமுடிகிறது. நனைந்த ஆடையுடன் குழந்தைகளும் அவர்களுடன் வருகிறார்கள். இது என் மனதை அதிகம் நெகிழ வைத்தது. ராமேஸ்வரப் பயணம் முடிந்து அன்றைய இரவு சற்றே வித்தியாசமாக இருந்தது. நனைந்திருந்த ஆடைகள் புகைவண்டியின் ஜன்னல்களில் ஆங்காங்கே காயப்போடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. அந்த புகைவண்டியில்  இருந்த மேற்கத்தியர் நான் மட்டுமே. வித்தியாசமான அனுபவங்களைப் பெற்றபோதிலும் அவர்கள் அனைவரும் நட்போடு நடந்துகொண்டதை உணர்ந்தேன்.  எனக்கு நல்ல பொழுது கிடைத்தது. அதிசயத்தக்க மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். இந்து சமயத்தைப் பற்றி சிலவற்றை அறிந்தேன்.  இந்திய வாழ்க்கை முறையின் சில கூறுகளை அறிந்தேன். 

பயணத்திட்டம் : 
நாள் 1 : தென்னகம் நோக்கி பயணம்
நாள் 2 : திருச்சி : 50 சன்னதிகளையும், 21 விமானங்களையும் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய கோயிலான 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பெற்றுள்ள சோழர் காலத்து பிரகதீஸ்வரர் கோயில் திருச்சி ரங்கநாதநாதஸ்வாமி கோயில்.
நாள் 3 : காலை : இராமேஸ்வரம் : விஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமருக்கான, லட்சக்கணக்கான இந்துக்களால் வழிபடப்படுகின்ற இராமநாதஸ்வாமி கோயில். மதியம் : மதுரை :  ஆயிரக்கணக்கான இறைவன், இறைவி, மற்றும் பலசிற்பங்களையும் ஓவியங்களையும் கொண்டமைந்துள்ள மீனாட்சியம்மன் கோயில்
நாள் 4 : கன்னியாகுமரி : இந்தியத்துணைக்கட்டத்தின் நுனியில் அமைந்துள்ள குமரியம்மன் கோயில்.
நாள் 5 : திருவனந்தபுரம் : கேரளாவில் கோவளம் கடற்கரையில் குளியல். இந்துக்கள் மட்டுமே வழிபட அனுமதிக்கப்படுகின்ற பத்மநாபஸ்வாமி கோயில்.
நாள் 6 : காஞ்சீபுரம் : எண்ணற்ற கோயில்களைக் கொண்டுள்ள காஞ்சீபுரம். காமாட்சியம்மன் கோயில். நான் அதிக நேரம் செலவழித்த இந்துக்கள் அல்லாதோரும் அனுமதிக்கப்படுகின்ற,  8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கைலாச நாதர் கோயில்.
நாள் 7 : திருப்பதி : திருப்பதி மலையின்மீது அமைந்துள்ள, நூற்றுக்கணக்கான பக்தர்களைக் கவர்ந்திழுக்கின்ற, சில நேரங்களில் மூலவர் தரிசனத்திற்காக ஒரு நாள்கூட காத்திருக்கவேண்டிய, வெங்கடேஸ்வரர் கோயில். இக்கோயிலில் பல பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக மொட்டையடித்துக்கொள்வதால், எங்கு பார்த்தாலும் மொட்டைத்தைலையுடன் பக்தர்களைக் காணமுடிகிறது. 
நாள் 8 : பயணம் நிறைவு செய்து திரும்பல்

நன்றி : தி கார்டியன்
சுருக்கமாக தமிழில் :  பா.ஜம்புலிங்கம்
கார்டியன் இதழின் இக்கட்டுரையினை An Indian railway adventure : the pilgrim train from Hyderabad to Tamil Nadu, The Guardian, Richard Eilers, 4 May 2018 என்ற இணைப்பில் வாசிக்கலாம். 

25 comments:

  1. உபயோகமான தகவல். நல்ல மொழிபெயர்ப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. சுவாரஸ்யம். அவர் சில அனுபவங்களை இன்னும் விளக்கமாக எழுதியிருக்கலாம்!

    ReplyDelete
  3. நல்ல பதிவு.ரயில்வே சுற்றுலாவில் என் தங்க்கை காசி, கயா, அலகாபாத் சென்று வந்தாள் நன்றாக இருக்கிறது என்றாள். தங்கும் இடங்களில் தனி அறை வசதியும் செய்து தந்தார்களாம். உணவு, தண்ணீர் எல்லாம் வசதியாக இருந்தது என்றாள்.

    ReplyDelete
  4. எக்களுக்கும் தரிசனம் கிடைத்தது போன்ற உணர்வு.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரரே

    நல்ல பயனுள்ள சுற்றுலா. நல்ல விஷயங்களை தெய்வ தரிசன சுற்றுலாவை அழகாய் தமிழில் மொழிப் பெயர்த்து தந்தமைக்கு மிக்க நன்றியுடன் பாராட்டுக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. ஒரு வெளிநாட்டவரின் அனுபவங்களை அழகாய்
    மொழிபெயர்த்துத் தந்துள்ளது நன்றாஆக உள்ளது.

    ReplyDelete
  7. வெளிநாட்டவரின் பார்வையில் சொல்லப்பட்டதைப் பகிர்ந்துள்ளீர்கள். இதே பாரத் தர்ஷன் நாங்க பத்தாண்டுகள் முன்னர் ஐஆர்சிடிசி ஸ்பான்சரில் ட்ராவல் டைம்ஸ் மூலம் போயிருக்கோம். ட்ராவல் டைம்ஸ் சென்னை, திருச்சி, மதுரையில் அலுவலகங்கள் உண்டு. அப்போது சென்னையில் இருந்ததால் மவுன்ட் ரோடில் இருந்த அந்த அலுவலகம் மூலம் பதிவு செய்து கொண்டு நாங்கள் சென்ற இடங்கள் மந்த்ராலயம்,நாசிக், பஞ்சவடி, சனி ஷிங்க்னாபூர், ஷிர்டி, பண்டர்பூர் போன்றவை. சிறப்பான ஏற்பாடுகள். அருமையான பாதுகாப்பு! நாம் கொண்டு செல்லும் சாமான்கள் பற்றிக் கவலையே பட வேண்டாம். சிறப்பான வோல்வோ பேருந்து வசதிகள் குளிரூட்டப்பட்டவை! ரயிலிலும் நல்ல வசதிகள். என்னன்னா அப்போ ஏ.சி. கிடையாது. பின்னால் நாங்கள் பலரும் ஏ.சி. வசதி கேட்டுக் கொண்டமையின் பேரில் கடந்த ஐந்து வருடங்களாக ஏ.சி. கோச்சும் இணைக்கின்றனர். அதே போல் தங்குமிடமும் பள்ளிக்கூடங்கள், சத்திரங்கள், கல்யாண மண்டபங்கள் என்றே இருந்தன. அவர்களிடம் முன்கூட்டிச் சொன்னால் நல்ல கோட்டலில் கேட்போருக்கும் மட்டும் அறைகள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். நாங்கள் இது தெரியாததால் ஒவ்வொரு ஊரிலும் எங்கள் செலவில் அறை ஏற்பாடு செய்து கொண்டோம். அவர்கள் மூலம் அறை ஏற்பாடு செய்து கொண்டால் காலை ஆகாரத்திலிருந்து மதிய உணவு, இரவு உணவு வரை எல்லாமும் அறையில் இருந்தால் அறைக்கே வரும். இல்லைனா தங்குமிடத்திலிருந்து மற்றப் பெரும்பான்மையானவர்கள் தங்கி இருக்கும் மண்டபம் அல்லது சத்திரம் வந்து உணவு உண்ண வேண்டும்.மற்றபடி நல்ல வசதியான பயணம்!

    ReplyDelete
    Replies
    1. //கோட்டலில்// ஓட்டல் எனப் படிக்கவும். ;(

      Delete
  8. இந்திய ரயில்வேயின் ஆன்மீகச் சுற்றுலா : கார்டியன் = அருமையான, பயனுள்ள கட்டுரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Dr B Jambulingam

    ReplyDelete
  9. சிறப்பான பயணத்திட்டங்கள் இந்தியன் ரயில்வேயில் உண்டு. கட்டணம் சற்றே அதிகமாகத் தோன்றினாலும் நன்றாகவே செய்கிறார்கள்.

    ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் வாசித்ததில் மகிழ்ச்சி.

    தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  10. மிகவும் பயனுள்ள சுவையான பதிவு.

    ReplyDelete
  11. அருமை .நன்றி

    ReplyDelete
  12. சுற்றுலாவின் இன்பமே தனி. கட்டுரை சிறப்பு சுற்றுலா செல்ல மனம் தூண்டுகிறது.

    ReplyDelete
  13. அறிந்து கொண்டேன் அய்யா...!!

    ReplyDelete
  14. பயனுள்ள தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

    ReplyDelete
  15. 800 பயணிகளுடன் ஒரு வாரம் பயணித்தும் ஒருவரோடும் பேச முடியவில்லையாமோ... அருமையான மொழி பெயர்ப்பு.

    ReplyDelete
  16. திருச்சியில் இருந்தபோது அயல் நாட்டு நண்பர் ஒருவரை உச்சி பிள்ளையார் கோவிலுக்குக்கூட்டிச் சென்றேன் பிற மதத்திப்னருக்கு அனுமதி இல்லை என்றனர் என்னுடன் வந்தவர் பிற மதத்தின் மீது துவேஷம் இல்லை என்றார் சிறிய வாக்கு வாதத்துக்குப் பின் அவர் நெற்றியில் பூசினால் அனுமதிக்கலாம் என்றனர் அவரும் உடன்பட உச்சி பிள்ளையார் கோவில் தரிசனம் நடந்தது நான் ஆனால் மதியாதோர் வாசல் மிதிக்க கூடாது என்னும் கொள்கை உடையவன்

    ReplyDelete
  17. தொடர்ந்து இதுபோன்ற மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை வெளியிடுங்கள் ஐயா

    ReplyDelete
  18. பயனுள்ள அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. பயனுள்ள அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. தென்னக இரயில்வே சுற்றுலா பற்றிய செய்தி படித்து மகிழ்ந்தேன். அருமையான மொழிபெயர்ப்பு. அனைத்தும் நன்றாக இருந்தது. ஆனால் இந்துக்கள் அல்லாதவர் அரங்கன் கோயிலில் அனுதிக்காதது சற்று வருத்தமே.இறைவனால் படைக்கப்பட்ட மனிதனுக்கு அவனது சந்நிதியில் இடமில்லை. மாற்றங்கள் வரும் என்று நம்புவோமாக.

    ReplyDelete
  21. சுவாரஸ்யமான தகவல். மேற்கத்தியர் நம் மக்களோடு பயணித்து பகிர்ந்த அனுபவத்தின் தமிழாக்கம் அருமை ஐயா. இன்னும் அவர் எழுதியிருக்கலாமோ என்றும் தோன்றியது.

    கீதா: அதே கருத்துடன் நமது ரயில்வே திட்டம் நன்றாக உள்ளது. பலரும் நல்ல அனுபவம் என்றே சொல்கின்றனர். சிறப்பாகச் செயல்படுவதாகவும் சொல்கின்றனர். நாங்கள் திருப்பதி மட்டுமே சென்றுள்ளோம் இதுவரை. அவரையும் கோயிலில் அனுமதித்திருக்கலாமே என்று தோன்றியது.

    ReplyDelete