20 July 2019

அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா : ஆலோசனைக்கூட்டம்

1972-75இல் நாங்கள் பயின்ற அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளதாகவும், அது தொடர்பாக 1956 முதல் 1970 வரை பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 16 ஜுன் 2019இல் நடைபெற்றதாகவும் நாளிதழ் மூலமாக அறிந்தேன். தாமதமாக அறிந்ததால் அக்கூட்டத்திற்குச் செல்ல முடியவில்லை. 

16 ஜுன் 2019 (மாணவர்கள் சந்திப்பு)



14 ஜுலை 2019 
கும்பகோணத்தில் ஆசிரிய நண்பர் திரு செல்வசேகரன் அவர்களைத் தொடர்புகொண்டபோது அடுத்த கூட்டம் 14 ஜுலை 2019 அன்று நடைபெறுவதாக அறிந்தேன். அக்கூட்டம் தொடர்பாக திரு வடிவேலு அவர்கள் எழுதியிருந்த கடிதத்தினை அவர் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கும்பகோணத்திலும், பிற ஊர்களிலும் உள்ள பல நண்பர்கள் முகநூலிலும், அண்ணா பள்ளி நூற்றாண்டு விழா என்ற பெயரிலும், தத்தம் பெயரிலும் வாட்ஸ்அப் மூலமும் விழா தொடர்பான செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர். 
கூட்டம் தொடர்பான செய்தியைப் பகிர்ந்த ஆசிரியர் திரு செல்வசேகரன்
திரு வடிவேலு 
கும்பகோணம் சென்று சேர்ந்ததும், வழக்கம்போல கும்பகோணத்திலுள்ள நண்பர்கள் அனைவரிடமும் அலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்துவிட்டு, பள்ளிக்குச் சென்றேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின் உள்ளே சென்றபோது மனக்குதிரை மிகவும் வேகமாகப் பறந்தது. அந்நாளைய நினைவுகள் வந்துகொண்டேயிருந்தன. இதனைப் பற்றி மனதில் நிற்கும் பேட்டைத்தெரு பள்ளி (1972-75) என்ற தலைப்பில் முன்பொரு பதிவில் விவாதித்துள்ளேன். 

அப்போது எங்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்கள், தலைமையாசிரியர் நினைவிற்கு வந்தனர். ஒலிபெருக்கியில் கேமரா என்று எங்களை பயமுறுத்தியது, ஓவிய ஆசிரியர் மயில் ஓவியம் வரைந்தது, நான்மானக்கூடம் சொல் குறித்து ஆசிரியர் விளக்கியது, பள்ளி விழாக்களில் ராஜ நாகம் திரைப்படப்பாடலைப் போட்டது, ஆசிரியர் பி.கே. ராஜராஜசோழன் திரைப்படம் வந்த காலகட்டத்தில் ராஜராஜசோழனைப் போல மீசை வைத்திருந்தது உள்ளிட்ட பல நினைவுகள் சுற்றிசுற்றி வந்தன. எஸ்.எஸ்.எல்.சி.யில் என் தேர்வு எண் 132430 என்பதும் நினைவிற்கு வந்தது.   1972இல் சேர்ந்தபோது நகராட்சி உயர்நிலைப்பள்ளியாக இருந்த அப்பள்ளி, பின்னர் மேல்நிலைப்பள்ளியாகவும், தொடர்ந்து அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியாகவும் மாறியது. நாங்கள் படித்த 9ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு கட்டடங்கள் முற்றிலுமாக மாறியிருந்தன. பல புதிய கட்டடங்களைக் காணமுடிந்தது.

நூற்றாண்டு விழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிப்புப்பலகையில் கண்டேன். முதல் கூட்டம் 16 ஜுன் 2019இல் நடைபெற்றதாகக் கூறினர்.
கூட்டம் ஆரம்பிக்கும் முன்பாக பள்ளி வளாகத்தினை ஆசைதீர சுற்றிவந்தேன். முன்னாள் மாணவர்கள் வர ஆரம்பித்தனர். ஒவ்வொருவரும் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டனர். நானும் பலரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். 
அப்பள்ளியில் படித்த, அரை நூற்றாண்டு கால  நண்பர், நாகராஜனுடன்
1952 முதல் படித்த மாணவர்கள் தொடங்கி அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். வந்திருந்தோர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது தொடர்பான கருத்துகளை முன்வைத்தனர். என் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.  
 




வலமிருந்து: பள்ளியின் தலைமையாசிரியர் திரு சாரதி, திரு செந்தில்நாதன், ஜம்புலிங்கம், எங்கள் ஆசிரியர் திரு பி.கே. 
1972-75இல் நான் படித்தபோது 1972இல் எனக்கு வகுப்பு எடுத்த
ஆசிரியர் திரு பி.கே.அவர்களுடன் 




















ஆலோசனைக்கூட்டத்தில் கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல கருத்துகள் விவாதிக்கப்பட்டன.
  • 11 நவம்பர் 2019இல் நூற்றாண்டு விழா கொண்டாடுதல்
  • பழைய மாணவர் சங்க 50ஆவது ஆண்டு விழா கொண்டாடுதல்
  • விழா சிறப்பாக நடத்துவதற்காக குழுக்களை அமைத்தல்
  • விழாக்குழுத்தலைவர், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தல்
  • பள்ளிக்கு நிலம் வழங்கிய குருநாதன் பிள்ளை அவர்களின் படத்தினைத் திறத்தல்
  • நூற்றாண்டு விழா நினைவாக நூற்றாண்டு விழா அமைத்தல்
  • விழா மலர் வெளியிடல்
  • பள்ளி வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் நூல் வெளியிடல்
  • தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல்
  • அறக்கட்டளை ஒன்றினை நிறுவுதல்
  • நிலையான கட்டடம் ஒன்றைக் கட்டுதல்
  • ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரித்து வெளியிடல்
  • நூலகம் அமைத்தல், உரிய நூல்களைப் பரிசாக வழங்கல்
  • வசூல் கமிட்டி அமைத்தல்
  • உறுப்பினர் கட்டணமாக ரூ.200 பெறல்
  • நன்கொடையாக அவரவர் வசதிக்கேற்ப அளிக்கக் கேட்டுக்கொள்ளல்
ஆலோசனைக்கூட்டம் தொடர்பான செய்திகளை வெளியிட்ட கீழ்க்கண்ட நாளிதழ்கள் உள்ளிட்ட அனைத்து இதழ்களுக்கும் நன்றி.




21 ஜுலை 2019 
21 ஜுலை 2019 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முந்தைய கூட்டத்திற்கு வராத பல புதிய மாணவர்கள் வந்திருந்தனர். 44 ஆண்டுகளுக்குப் பின், அப்போது எங்களுடன் படித்த திரு ஷண்முகசுந்தரத்தினைக் கண்டேன். கும்பகோணத்தில் நாங்கள் இருந்தபோது குடும்ப மருத்துவராகவும் நண்பராகவும் இருந்த மருத்துவர் செல்வராஜ் அவர்கள் வந்திருந்தார்.  1952 ஆண்டு முதல் படித்த மாணவர்களும், அவர்களில் தலைமையாசிரியராக இருந்தவர்களும் வந்திருந்தனர். கூட்டத்திற்கு திரு பன்னீர்செல்வம் (1961-62 பிரிவு முன்னாள் மாணவர்) தலைமை வகித்தார்
அப்பள்ளியில் படித்த நண்பர் ஷண்முகசுந்தரத்துடன்

தலைமை வகித்த திரு பன்னீர்செல்வம் அவர்களுடன்

எங்கள் குடும்ப மருத்துவரும் நண்பருமான மருத்துவர் செல்வராஜ் உரையாற்றுகிறார்


 










  







ஆலோசனைக்கூட்டத்தில் கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல கருத்துகள் விவாதிக்கப்பட்டன.
  • முன்னாள் மாணவர் சங்கத்தினைப் பதிவு செய்தல்
  • தற்போது உறுப்பினர் கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கம் பதிவு செய்தபின் நன்கொடைகளைப் பெற ஆரம்பித்தல்
  • விழாவிற்கான தேவைகளை வரையறுத்துத் திட்டமிடல்
  • மழைநீர் சேகரிப்பு அமைத்தல்
  • சூரிய சக்தி பெறும் அமைப்பு உருவாக்கல்
  • கூட்டத்தில் வராதவர்களுக்குத் தெரிவிக்க முயற்சி மேற்கொள்ளல்
  • தற்காலிகக் குழுக்கள் அமைத்தல் 
அடுத்த ஆலோசனைக்கூட்டம் 4 ஆகஸ்டு 2019 அன்று நடைபெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

4 ஆகஸ்டு 2019 
4 ஆகஸ்டு 2019 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் கடந்த கூட்டத்திற்கு வந்ததைப்போல மாணவர்கள் வந்திருந்தனர். ஆண்டு உறுப்பினர் கட்டணமாக ரூ.200உம், வாழ்நாள் உறுப்பினர் கட்டணமாக ரூ.2000உம் வசூலிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன.



18 ஆகஸ்டு 2019 (ஆலோசனைக்கூட்டம்)
18 ஆகஸ்டு 2019 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மாணவர் சங்கத்தை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள், நினைவு மலர் அமையவேண்டிய விதம் உள்ளிட்ட தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன. 




கீழ்க்கண்டவர்கள் பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தலைவர் : திரு கே.கிருஷ்ணமூர்த்தி
துணைத்தலைவர் :  திரு வி.ஐகுந்தன்
செயலாளர் : திரு ஆ.வடிவேலு
பொருளாளர் : திரு மா.ந.பரதன்

6 அக்டோபர் 2019
6 அக்டோபர் 2019 அன்று நடந்த கூட்டத்திற்கு முன்னாள் மாணவர்கள் வந்திருந்தனர். தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் விழாவினை முன்னெடுத்துச் செல்வது தொடர்பான கருத்துகளை எடுத்துரைத்தனர். முன்னாள் மாணவர்கள் மிகவும் ஆர்வமாக தாம் செய்து வரும் பணிகள் குறித்து விவாதித்தனர். தலைமையாசிரியரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
20 அக்டோபர் 2019
இன்று காலை காரைக்கால் பண்பலை வானொலியில் நம் பள்ளியில் நடைபெறும் இக்கூட்டம் பற்றிய செய்தி ஒலிபரப்பானது. முன்னாள் மாணவிகளின் இறை வணக்கத்துடன் கூட்டம் தொடங்கியது. இன்றைய கூட்டத்திற்கு முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்களான திரு பி.கே. திரு ஜே.எஸ்.குலசேகரன், திரு சீ. சந்திரசேகரன், திரு கிருபாமூர்த்தி, திரு ராமச்சந்திர உடையார், திரு சுந்தரம்,  ஆகியோர் உள்ளிட்ட ஆசிரியர்கள் வந்திருந்தனர். திரு பட்டீஸ்வரம் செல்வம் வரவேற்புரை வழங்கினார். தலைமையாசிரியரும் கலந்துகொண்டார். விழாவிற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குவதாக அவர் கூறினார். தலைவர், துணைத்தலைவர், செயலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னாள் மாணவர்கள் தர்மராஜன் கே.கே.எஸ்.ராஜா, வாசுதேவன், ஆடிட்டர் கல்யாணசுந்தரம்,  வழக்கஞறிஞர் செந்தில்நாதன், வீரப்பன் உள்ளிட்டோர் தாம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து கருத்துகளைத் தெரிவித்தனர்.  (இக்கூட்டத்தில் விழாவிற்கு நன்கொடையாக ரூ.5,000 வழங்கினேன். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக சந்தித்த நண்பர் திரு வெற்றி திருநாவுக்கரசு இங்கு ஆசிரியராகச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.) அடுத்த கூட்டம் 10 நவம்பர் 2019 அன்று நடைபெறவுள்ளது. 

  
10 நவம்பர் 2019
10 நவம்பர் 2019 அன்று பள்ளிக்கு வருவோருக்கு மகிழ்ச்சியளிக்கின்ற நற்செய்தி காத்திருப்பதாக நண்பர்கள் செய்தி அனுப்பியிருந்தார். நண்பர்கள் அனைவரையும் கண்டதே மகிழ்ச்சி என்றனர். முன்னாள் மாணவர் திரு மதியழகன் அனைவரையும் வரவேற்று அழைப்புச் செய்தி விடுத்திருந்தார்.  

சென்னையைச் சேர்ந்த முன்னாள் மாணவியான திருமதி ராதாபாய் இப்பள்ளியில் படித்த தன்னுடைய சகோதரிகளுடன் வந்திருந்ததோடு நன்கொடையையும் வழங்கினார். 
முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தம் கருத்துகளைக் கூறினர். திரு ஐகுந்தன் முன்னிலை வகித்தார். திரு செல்வம், திரு திருஞானசம்பந்தம், திரு குலாம் மைதீன், திரு ராமகிருஷ்ணன், திருமதி தகைச்செல்வி, திரு பழனிநாதன், திரு செந்தில்நாதன், திரு கரும்பாயிரம், திரு சிவகுருநாதன், முனைவர் ஜம்புலிங்கம், முனைவர் செல்வசேகரன், மருத்துவர் செல்வராசன் உள்ளிட்டோர் விழா நிகழ்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப் பற்றி தத்தம் கருத்துகளைத் தெரிவித்தனர். திரு வடிவேலு நன்றி கூறினார். 
என் நண்பன் தயாளனின் சகோதரியும் என்னுடைய உடன் பிறவா சகோதரியுமான திருமதி தகைச்செல்வி 30 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டு பேசும் வாய்ப்பினைப் பெற்றேன். பள்ளிக்காலம் தொடங்கி என்னை நெறிப்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். ஒருவரையொருவர் அறியாமலே (அவர் என்னை வாங்க, போங்க என்றும் நான் அவரை அம்மா என்றும்) பேசிக்கொண்டிருந்தோம். என் பெயரைக் கேட்டதும் தயாளனின் நண்பன்தானே? என்று கேட்க, நான் ஆம் என்றதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். உடன் என்னுடைய 40 ஆண்டுகால நண்பர் நாகராஜன் இருந்தார். அவரும் அவரை அறிவார். கூட்டம் முடிந்த பின்னர் 30 வருட குடும்ப நிகழ்வுகளை இருவரும் மனம் விட்டுப் பேசினோம். பற்றற்ற பற்று விரவியிருக்கும் இக்காலகட்டத்தில் அவருடைய பற்றானது என்னை கடந்த காலத்திற்கு இட்டுச் சென்றுவிட்டது. நாங்கள் மூவருமே அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள். எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா என்பதை நினைப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.   







புகைப்படங்கள், நாளிதழ் நறுக்குகள் நன்றி : 
முனைவர் செல்வசேகரன், திரு சிவ.கோ.சண்முகவேலு, அரிமா திரு பாலசுப்ரமணியன், திரு மதியழகன் மற்றும் பிற முன்னாள் மாணவர்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுவினர்




அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியைப் பற்றி விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த பதிவினை மேற்கண்ட இணைப்பில் காணலாம். இப்பள்ளியில் படித்த மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியப்பெருமக்கள், நண்பர்கள் இப்பள்ளி தொடர்பான செய்திகளை வலைதள இணைப்புடனோ, பிடிஎப் வடிவிலோ எனக்கு (drbjambulingam@gmail.com) அனுப்பிவைத்தால் விக்கிபீடியாவிலுள்ள நம் பள்ளி தொடர்பான பதிவினை மேம்படுத்த முடியும். இருக்கும். இந்த முன்னாள் மாணவனின் முயற்சிக்கு உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பு பெரிதும் உதவும்.

நாங்கள் இப்பள்ளியில் படித்த இனிய அனுபவங்களை மேற்கண்ட இணைப்பில் காணலாம். 

13 நவம்பர் 2019 அன்று மேம்படுத்தப்பட்டது.

பள்ளி தொடர்பான பிற இணைப்புகள்:



10 comments:

  1. பசுமை நிறைந்த நினைவுகளைப் பாடித்திரிந்த பறவைகள் சங்கமித்தனவோ?- ஆக்கபூர்வமான முயற்சி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பழைய மாணவர்கள் ஒன்று கூடிய நிகழ்வு போல. நல்லா ஆலோசனைகள். நூற்றாண்டுவிழா ஆலோசனைகள் எல்லாம் நல்லபடியாகச் செயல்படுத்தப்படவும் விழா இனிதாக நடக்கவும் வாழ்த்துகள் ஐயா.

    கீதா

    ReplyDelete
  3. மலர்ந்த நினைவுகள் அருமையாக இருந்தன.
    ஒரு பள்ளிக்கூடத்தின் பழைய மாணவர்கள்
    மீண்டும் ஒன்று சேர்வது மறக்கமுடியாத அனுபவம் தான்.

    ReplyDelete
  4. நீங்கள் பால்ய பருவத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட இடங்களுக்கு பக்கத்திலேயே இருப்பது ஒரு வசதி.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரரே

    மலர்ந்த நினைவுகளுடன் இளமை பருவத்தில் கூடப் படித்த பள்ளி மாணவர்களுடன், அதே பள்ளிக்கு சிநேகித மனப்பான்மையுடன் சென்று விழாக்களில் கலந்து சிறப்பித்து வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. பல சிறந்த திட்டங்களை ஆலோசனை செய்து அதை நல்லபடியாக நிர்வகிக்க முடிவெடுத்து வந்தமைக்கும், அதையொட்டிய விழாக்கள் சிறப்பாக நடைபெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete



  6. இன்று ஒருவரைச் சந்தித்தேன். 1993 அன்று என்னுடன் ஒரு நிறுவனத்தில் பணியாற்றியவர். அதற்குப் பிறகு ஒரு தடவை அவரைச் சந்தித்துள்ளேன். 15 வருடங்களுக்குப் பிறகு இன்று தான் சந்தித்தேன். எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. அவர் தான் என்னை அடையாளம் வைத்து அழைத்துப் பேசினார். என் வயது உள்ள அவர் முதிர்ந்த தோற்றமாக மாறிவிட்டார்கள். அதாவது பத்து வருடங்கள் கழித்து எப்படி முதுமை வருமோ? அந்த அளவுக்கு மாறியிருந்தார். இதை இங்கே சொல்லக் காரணம் உங்கள் தோற்றம் ஆச்சரியமளிக்கின்றது. நீங்கள் குறிப்பிட்டுள்ள வருடம், உங்களுடன் இருப்பவர்கள், உங்கள் ஆசிரியர்கள் என அனைவருடனும் ஒப்பிட்டுப் பார்த்த போது உங்கள் ஆரோக்கியம் பார்த்து பெருமையாக உள்ளது. உங்கள் வயதில் நானும் இப்படி இருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. மாணவப் பருவமாக இருந்து இன்று 40 வருடங்கள் கழித்துப் பார்க்கும் எத்தனை எத்தனை மாற்றங்களை ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் சந்தித்து இருப்பார்கள். நானும் கல்லூரியில் படித்தவர்களை சமீபத்தில் சந்தித்தேன். அந்த சுவராசியத்தை விரைவில் எழுதுவேன்.

    ReplyDelete
  7. மனமகிழ் நிகழ்வு.

    ReplyDelete
  8. 10 ம் வகுப்பு பதிவெண்ணை நினைவு வைத்திருப்பது அருமை ஐயா.
    ஏங்க வைத்த பதிவு.

    ReplyDelete
  9. படங்களுடன் இணைந்த தகவல்கள் அருமையான பதிவுகள்

    ReplyDelete
  10. பள்ளி நண்பர்களுடந்தொடர்பில் இல்லை இருக்க முடியவில்லை ஆனால் பயிற்சியின்போது இருந்த பலரிடமும்தொடர்பு உண்டு முடிகிறதுஒரு முறை கூனூரில் படித்தபள்ளிக்குச்சென்று அதன் தலைம்சை அசிரியரை சந்தித்தேன் நான்படித்த வருடம் கேட்டார் சொன்னபோது அப்போது அவர் பிறந்திருக்கவே இல்லை என்றார்

    ReplyDelete