09 June 2025

அறம் பயில்வோம் : கு.பாலசுப்ரமணியன்

கும்பகோணம், காந்தியடிகள் நற்பணிக்கழக இதழில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 53 கட்டுரைகளின் தொகுப்பாக அறம் பயில்வோம் என்ற நூலினை வெளியிட்டுள்ளார் நூலாசிரியர் கு.பாலசுப்ரமணியன்.  



அறம் வளர்த்த தலைவர்கள், கல்வி, அரசியல் சமுதாயப்பார்வை, சிறுகதைகள் என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட இந்நூல் அறத்தைக் கற்கவும், அதனைத் தொடரவும் ஓர் உந்துதலைத் தருகிறது. பெரும்பாலானவை அறம் என்ற பின்புலத்தில் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. நூலைப் படித்து முடிந்தபின் நம்முள் அறம் என்ற சிந்தனை துளிர்த்துப் பரவுவதை உணரமுடியும். நூலின் சில கட்டுரைகளைக் காண்போம்.


முதல் உட்தலைப்பின்கீழ் காந்தி, நேரு, காமராஜர், மொரார்ஜி தேசாய், லால்பகதூர் சாஸ்திரி உள்ளிட்ட தலைவர்களின் சாதனைகள் விவாதிக்கப்படுகின்றன. காந்தியின் தாரக மந்திரம் கரோ பஹலே, கஹோ பீச்சே..உலகம் மாசுபடுவதற்கான சுற்றுச்சூழலில் விஷம் கலப்பதற்கான அனைத்துச் செயல்களையும் செய்துகொண்டே அதைப்பற்றிப் பேசுவது நகை முரண் இல்லையா? (ப.3) காந்தியைப் பற்றிய தவறான புரிதலைப் பரப்பும் அறிவுஜீவிகளிடமிருந்து காந்தியைக் காப்பாற்றுவது நமது கடமை (ப.7). மதச்சார்பின்மையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டவராக நேருவை நம்பியதால் தன்னுடன் பல வகையில் முரண்பாடு கொண்ட நேருவை அரசியல் தன் அரசியல் வாரிசாக அறிவித்தார் காந்தி. (ப.12)


நேரு, தான் ஆட்சி செய்த 17 ஆண்டு காலத்தில் வட இந்தியாவைவிட தென் இந்தியாவிலேயே அதிக செல்வாக்கு பெற்றவராக விளங்கினார். (ப.21) நேருத என்றால் நமக்குத் தோன்று மதச்சார்பின்மைதான். (ப.26) சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட ஜனநாயக சோசலிசம் என்ற ஒரு புதிய தத்துவத்தை இந்தியாவின் முன் மட்டுமல்ல உலகின் முன் வைத்தார் நேரு. (ப.31) நேரு, காமராஜரை அவரது நேர்மைக்காகவும் எளிமைக்காகவும் மதித்தார். (ப.41)


உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இவை அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதே காமராஜரின் சிந்தனையாக இருந்தது. (ப.50) அனைத்துக் கல்வியும் இலவசம், அனைவருக்கும் இலவசம் இதுதான் காமராஜர் ஆட்சி. (ப.59) பச்சைத்தமிழன் ஆட்சி..தரமான இலவசக்கல்வி, மது கண்டறியாத மக்கள், அரசியல் தலையிடா காவல்துறை, ஓட்டுகளை எதிர்பார்க்கா திட்டங்கள், கரைபடியா கரம்கொண்ட அமைச்சர்கள்...(ப.66)


அறமே மெய்யின்பம்..அறனையே துணை எனக்கொள்வோம் எனக் கூற பாரதி தேவை. அவ்வாறே பாரதியின் முற்போக்குச் சிந்தனைகள் இக்காலத் தேவையாகும். (ப.72)


கல்வி, அரசியல் சமுதாயப்பார்வை என்ற உட்தலைப்பில் உள்ள கட்டுரைகள் தற்கால அரசியல், பொருளாதார, சமுதாயப்பார்வையைத் தருகின்றன. தனியார்மயமாக்கப்பட்ட கல்வியால் தாய்மொழிக்கல்வி புறக்கணிப்பு, சமூகப்பொறுப்பு பற்றிய அறிவுரை நிறுத்தப்படல், கல்விச்செலவுக்காகக் கடன்பட்ட வாழ்க்கை, மனப்பாடம் செய்யும் நிலை, மாணவர்களிடம் காட்டிய கண்டிப்பு குறைவு, மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாறல், வணிக நோக்கு. (ப.93) நீட் தேர்வு மாணவர்கள் மீது ஏவிவிடப்பட்ட விஷம் தோய்ந்த அஸ்திரமாகும். (ப.101).

அரசியல் என்பது தொண்டா? வணிகமா? பிழைப்பா? என்றில்லாமல் அரசியல் அறம் என மாற்றப்படவேண்டும். அது அறம் சார்ந்த அரசியலை விரும்புவோர் எண்ணிக்கை மிகும் காலத்தில்தான் மெய்ப்படும். அதற்குக் காத்திருப்பதைத் தவிர வேறுவழியில்லை. (ப.116)


மதம், சாதி, இனம், தீண்டாமை, மது, மூடப் பழக்கவழக்கங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிலிருந்து விடுபடும் நாளே பாரதி கனவு கண்ட விடுதலை நாள். (ப.127) லஞ்சம் உள்ள இடத்தில் ஊழலும், ஊழல் உள்ள இடத்தில் லஞ்சமும் இணைந்தே வாசம் செய்யும். இவை நமது அறப்பண்புகளை அளித்து நம்மை மனிதத்தன்மை அற்றவர்களாக மாற்றுகின்றன. (140).


நூலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் ஊடாக அறம் என்பதானது பரிணமிப்பதைக் காணலாம்.


இவ்வகையில் இந்நூலில் அறம் என்ற கோட்பாடானது நூல் முழுவதும் விரவியிருப்பதைக் காணமுடிகிறது. அறம் சார்ந்த வாழ்க்கை பல்வகையில் நம்மை உயர்த்தும் என்பதையும், அறத்தை உணர்ந்து பின்பற்றும்போது கிடைக்கும் விளைவுகள் நல்ல பயனைத் தரும் என்பதையும் நூலாசிரியரின் எழுத்து உறுதி செய்கிறது. நன்னெறிகள் கொண்ட ஓர் அரிய நூலைப் படித்த எண்ணத்தைத் தருகின்ற இந்நூலை வாசித்து, அறநெறியைக் கடைபிடிக்க முயல்வோம். அற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்ற நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.


தலைப்பு : அறம் பயில்வோம்   

ஆசிரியர் : கு.பாலசுப்ரமணியன் 
அலைபேசி : 
 99527 93520
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, மே 2025
விலை : ரூ.250

50ஆவது ஆண்டு விழா (5, 7, 8 ஜூன் 2025)


முதல் நாள் நிகழ்வு






இரண்டாம் நாள் நிகழ்வு










மூன்றாம் நாள் நிகழ்வு





காந்தியடிகள் நற்பணிக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் அங்கு நானும், என்னுடைய நண்பர்கள் சிலரும் இந்தி வகுப்பில் சேர்ந்தோம். நான் ராஷ்ட்ரபாஷா வரை தேர்ச்சி பெற்றேன். அப்போது நான் கற்ற இந்தியானது சென்னையில் முதன்முதலாகப் பணியில் சேர்ந்தபோதும், கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின்போதும்,  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப்பட்ட ஆய்வு மேற்கொண்டபோதும்,  வட இந்தியக்கோயில்களுக்குச் சென்றபோதும். எனக்குப் பெரிதும் உதவியது. அவ்வப்போது இன்றும் துணையாக நிற்கிறது. 
அறம் பயில்வோம் நூலினை வெளியிடும் வாய்ப்பினைத் தந்த காந்தியடிகள் நற்பணிக்கழகத்திற்கு நன்றி.

----------------------------------------------------------------------------

ஒளிப்படங்கள் நன்றி : திரு குடந்தை ஆடலரசன், திரு சு.செல்வம்

----------------------------------------------------------------------------

19 May 2025

மனதில் நிற்கும் இந்தி வகுப்புகள் (1977-79)

1970களின் இடையில்..கும்பகோணம் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் காவிரியாற்றுக்குச் செல்லும் வழியில் மூர்த்திச்செட்டித் தெரு, பாட்றாச்சாரியார் தெரு தெருக்களை அடுத்து இடது புறத்தில் கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் உள்ளது. அங்கிருந்து சிறிது தூரத்தில் வலது புறத்தில்  நாங்கள் தட்டச்சுக்குச் சென்ற ஈஸ்வரன் தட்டச்சுப் பயிற்சி நிறுவனம் ஒரு வீட்டின் மாடியில் இயங்கிவந்தது. அதன் எதிரே வலது புறத்தில் கும்பகோணம் கூட்டுறவு பால் சொஸைட்டியும், இடது புறத்தில் ரேஷன் கடையும் இருந்தன. தட்டச்சுப் பயிற்சி முடிந்தபின் கீழே இறங்கிவருவோம். முதலில் ஆங்கிலத் தட்டச்சு கற்றுக்கொண்டோம். என்னுடைய ஆரம்பக் காலத் தட்டச்சுப் பயிற்சி இங்குதான். பின்னர் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட, பாரத் தட்டச்சுப் பயிற்சி நிறுவனத்தில் (தற்போது கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் உள்ளது) சேர்ந்து ஆங்கில, தமிழ் தட்டச்சிலும், ஆங்கில, தமிழ் சுருக்கெழுத்திலும் தேர்ச்சி பெற்றேன். அது ஒரு தனி அனுபவம்.

தட்டச்சு நிறுவனம் இயங்கிய வீட்டின் கீழே திண்ணையில் ஒருவர் இந்தி வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார். அவரிடம் நானும், செல்வம் (பழைய அரண்மனைத்தெரு), ஐயப்பன் (முத்துப்பிள்ளைமண்டபம்), உள்ளிட்ட பல நண்பர்களும் ஆரம்ப காலத்தில் இந்தி கற்றுக்கொண்டோம். 

எங்கள் அப்பா என்னை பல ஆங்கில, இந்தித் திரைப்படங்களுக்கு அழைத்துச்சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து, மொழி தெரியாமல் பாபி, ஷோலே, தீவார் போன்ற இந்தித் திரைப்படங்களைப் பார்த்த சில ஆண்டுகளில்தான் இந்தி வகுப்புக்குச் சென்றோம்.  ஆசிரியர் நடத்திய விதம் எங்களுக்கு எளிதாகப் புரிந்தது. தெரியாத சொற்களுக்கு அவ்வப்போது பொருள் கேட்டுத் தெரிந்துகொள்வோம். நாங்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பொருள் கூறுவார். 

காந்தியடிகள் நற்பணிக்கழகம், காலசந்தி கட்டளை
(ஏப்ரல் 2025இல் சென்றபோது எடுத்த ஒளிப்படம்)

பிறகு, 1970களின் இடையில் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் ஆரம்பிக்கப்பட்ட காந்தியடிகள் நற்பணிக்கழகத்தில் (தற்போது காலசந்தி கட்டளையில் செயல்பட்டுவருகின்றது) இந்தி வகுப்பினைத் தொடர்ந்தேன். என்னுடன் பள்ளி நண்பர்களான  ராஜசேகரன் (16 கட்டு, திருமஞ்சன வீதி)மதியழகன் (திருமஞ்சன வீதி), மோகன் (சிங்காரம் செட்டித்தெரு), ஐயப்பன் (முத்துப்பிள்ளை மண்டபம்) படித்த நினைவு.  

நான் ப்ராத்மிக் (பிப்ரவரி 1978), மத்யமா (ஆகஸ்டு 1978), ராஷ்ட்ரபாஷா (பிப்ரவரி 1979)  ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றேன். பணிக்குச் சென்றபின்னர் பிரவேசிகாவில் தேர்ச்சி பெற்றேன். சிலர் இடையிலே நின்றுவிட்டனர். எங்களில் மோகன் மட்டும் ப்ரவின் வரை படித்தார். பின்னர் நான் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபோது மோகன் எனக்கு  இந்தியில் கடிதம் எழுதியதும் நான் பதில் எழுதியதும் நினைவில் உள்ளது. 

1979இல் சென்னையில்  முதன்முதலாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த போது அங்கு ஆங்கிலமும், இந்தியும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டதைக் கண்டேன். நான் கற்ற இந்தி எனக்கு அப்போது கைகொடுத்தது. சேர்ந்த சில நாள்களில் அந்நிறுவன மேலாளர் என்னிடம்  டில்லியில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையலுவலகத்திலிருந்து  அவ்வப்போது தொலைபேசி அழைப்பு வருமென்றும், பெறப்படும் செய்தியைத் தட்டச்சுச் செய்துதரவேண்டும் என்றும் கூறினார். அதற்கு முன்னர் ஓரிரு முறை தான் நான் தொலைபேசியில் பேசியுள்ளேன். அதிகம் நான் தொலைபேசியில் பேசியது வழக்கமில்லை என்று கூறியபோது அவர் என்னை ஊக்கப்படுத்தி அனுபவத்தில் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம் என்றார். அவர்கள் இந்தியில் பேசக்கூட வாய்ப்புள்ளது என்றார். அவ்வாறான ஒரு சூழலை எதிர்கொள்ளத் தயாராக இருந்தேன். 

அவர் சொன்ன மறுநாளே புதுதில்லி அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் ஒரு செய்தி வந்தது. மேலாளர் தொலைபேசியை என்னிடம் கொடுத்து அவர்கள் பேசுவதைக் கேட்டு, சுருக்கெழுத்தில் குறித்துக்கொண்டு, அதனைத் தட்டச்சிட்டு வரும்படிக் கூறினார். டெல்லியிலிருந்து வந்த, ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஒருவர் தொலைபேசியில் பேசிய அலுவலகச் செய்தியை அப்படியே உள்வாங்கிக்கொண்டு சுருக்கெழுத்தில் எழுதி, (தெரியாத, புரியாத இடங்களில் புள்ளி வைத்தும், இடைவெளிவிட்டும் சமாளித்து) அதனை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தேன். மேலாளர் அதனைப் பார்த்துத் திருத்தித் தரவே மறுபடியும் அதனைத் தட்டச்சிட்டேன். அவர் என்னுடைய முதல் முயற்சியை அதிகம் பாராட்டினார். 

அவ்வாறே கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் நேர்முகத்தேர்விற்குச் சென்றபோது வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றேன். பம்பாயிலிருந்து வந்த அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார். அவ்வப்போது இந்தியிலும் பேசினார். எதிர்கொள்ள சற்றே சிரமப்பட்டாலும், சமாளித்து விடையளித்தேன். வந்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்டோரில் மூவரைத் தேர்ந்தெடுத்தனர். அம்மூவரில் என்னை முதலாவதாகத் தெரிவு செய்து தலைமையலுவலகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியாற்ற ஆணை தந்தனர். மற்ற இருவரும் கேரளாவிற்கும், ஆந்திராவிற்கும் சென்றனர். வந்திருந்தோரில் இந்தி மொழியறிவு, ஆங்கிலத் தட்டச்சு, ஆங்கிலச் சுருக்கெழுத்து ஆகிய தகுதிகளுடன் நான் மட்டுமே இருந்ததாகக் கூறினர்.  ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள, நான் நேர்முகத்தேர்வினை எதிர்கொண்ட, அதே அலுவலகத்தில் பின்னர் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினேன். 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சோழ நாட்டில் பௌத்தம் (1999) என்ற தலைப்பில் நான் மேற்கொண்ட முனைவர்ப் பட்ட ஆய்விற்காக  இந்திய, வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலிருந்து நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளின் ஒளிப்படங்களைக் கேட்டு ஆங்கிலத்தில் நான் கடிதம் எழுதியபோது சில அருங்காட்சியகத்தார் இந்தியில் மறுமொழியினை அனுப்பியிருந்தனர். எப்போதோ நான் கற்ற இந்தி அப்போது எனக்குப் பெரிதும் உதவியது.  அதனடிப்படையில் அவர்களிடமிருந்து பெற்ற நாகப்பட்டின புத்தர் சிற்பங்கள் தொடர்பான விவரங்களை என் ஆய்வேட்டில் இணைத்தேன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு வட இந்தியாவிலுள்ள கோயில்களுக்குச் சென்றபோது பெயர்ப்பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகள் தொடங்கி அனைத்து இடங்களிலும் இருந்த இந்தி எழுத்துகளை மிக எளிதாகப் படிக்கவும், புரிந்துகொள்ளவும் பெரிதும் உதவியது. சுமார் 20 பேர் கொண்ட குழுவில் நானும், எங்களை அழைத்துச்சென்றவரும் மட்டுமே இந்தி அறிந்திருந்தோம். 

தற்போதெல்லாம் அவ்வப்போது இந்தி செய்தியினைக் கேட்கிறேன். ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. தெரியாத சொற்களுக்கு, ஆரம்பத்தில் ஆங்கில நாளிதழை வாசித்தபோது பயன்படுத்திய உத்தியின் அடிப்படையில், அகராதிகளை நாடுகின்றேன்.  1977இல் கற்க ஆரம்பித்து, பிரவேஷிகா வரை கற்றபோதிலும் அரிதாகப் பயன்படுத்துவதால் சற்று சிரமம் இருப்பதை உணர்கிறேன். இருப்பினும் நான் அப்போது கற்ற இந்தி அவ்வப்போது கைகொடுப்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்.  

ஆரம்பத்தில் திண்ணையில் நான் கற்ற இந்தியானது தொடர்ந்து கும்பகோணம் காந்தியடிகள் நற்பணிக்கழகத்தின் மூலமாக   பிரவேஷிகா வரை தேர்ச்சியடையவும், பணிக்காலத்தில் பல நிலைகளிலும், ஆய்வின்போதும் பெரிதும் உதவியது. இந்நாளில், அப்போது எனக்குக் கற்பித்த திண்ணை இந்தி வகுப்பு ஆசிரியரையும், காந்தியடிகள் நற்பணிக்கழகத்தின் பாலுஜி அவர்களையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன். 

20 மே 2025இல் மேம்படுத்தப்பட்டது.

14 May 2025

சோழநாட்டு நடுகற்கள் (மன்னு பெரும் முன்னோர் மரபு) : வே.பார்த்திபன்

வே. பார்த்திபன் எழுதியுள்ள சோழநாட்டு நடுகற்கள் (முன்னு பெரும் முன்னோர் மரபு)  என்னும் நூல்  திருச்சிராப்பள்ளி மாவட்ட நடுகற்கள் மற்றும் தொல்லியல் சின்னங்கள், பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட  நடுகற்கள், தஞ்சாவூர்-திருவாரூர்-நாகப்பட்டினம்-கடலூர்-மயிலாடுதுறை மாவட்ட நடுகற்கள், கரூர்-புதுக்கோட்டை எல்லைப்பகுதி நடுகற்கள், சேலம்-நாமக்கல் எல்லைப்பகுதி நடுகற்கள் என்னும் உட்தலைப்புகளையும், உரிய ஒளிப்படங்களையும் கொண்டு அமைந்துள்ளது.



நடுகற்கள் அமைந்துள்ள இடம், அவ்விடத்தின் சிறப்பு, நடுகற்களின் காலம், உருவ அமைப்பு ஆகியவற்றை இலக்கியச் சான்றுகள், புராண வரலாற்றுச்செய்திகள், கல்வெட்டு அறிக்கைகள், முந்தைய ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள், நூலாசிரியரால் கண்டுபிடிக்கப்பட்டவை, கண்டுபிடிப்பு பற்றிய நாளிதழ் நறுக்குகள் என்ற வகையில் தெளிவான புரிதலுடன் ஒவ்வொரு நடுகற்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைப்பதோடு, மேற்கோள் காட்டல், தகவலாளர்களுக்கு நன்றி கூறல் போன்ற நெறிமுறைகளையும் நூலாசிரியர் கடைபிடித்துள்ளார். கிடைக்காத சிற்பத்திற்கு அதன் மைப்படியை வைத்து விவாதிக்கிறார். நடுகல்லின் தோற்றுவாய், சோழநாட்டு நடுகற்கள் மரபு என்ற தலைப்புகளில் நூலுக்கான பின்புலத்தை ஆராய்கிறார். 

நூலாசிரியர், ஜி.பி.எஸ்.தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவிதம் இந்நூலின் சிறப்புக்கூறாக உள்ளது. நூலிலிருந்து சில நடுகற்களைப் பற்றிக்காண்போம்.

….பொதுவாக நடுகல் போர்க்குடிகளும், வனவிலங்கிலிருந்து ஊரைக் காத்த வேட்டுவ, வேளாண் குடிகளும் எழுப்புவர். முதன்முதலாய் பிராமணர் ஒருவரக்கு இந்நடுகல் (நன்னிமங்கலம் நடுகல்) எழுப்பப்பட்டுள்ளது. அவ்வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. (ப.59)

…திருச்சி மாவட்டம் இரட்டமலையில் வேட்டை கருப்பர் நடுகல் உள்ளது.  குதிரையைக் காவு கொடுத்த வேட்டன் மதிரை இன்று வேட்டைக்கருப்பாக வணங்குவதைக் காணமுடிகிறது.…இதுபோன்ற போர்க்கருவிகள் சூழ குதிரையுடன் கூடிய நடுகல் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. (ப.65)

…வீரனின் முழு உருவமும், முழுக்கச் சிதைந்துள்ளதால் நீண்ட நேரம் உற்றுப் பார்த்தே அடையாளம் காண வேண்டியுள்ளது. அப்பகுதி மக்கள் இவ்வீரனின் உருவமும், பெயரும் அறியாததால் இவரை பெண் தெய்வம் எனக் கருதி செல்லாண்டியம்மன் என்ற பெயரில் வழிபடுகின்றனர். (ப.70)

….தமிழகத்தின் பல இடங்களில் கேட்பாரற்றும, புறக்கணிக்கப்பட்டும், தெருவில் வீசியும், குப்பைக்கூளங்கள் மத்தியில் கிடக்கும் நடுகல் சிலைகளைப் பார்த்ததுண்டு. ஆனால் ஒரு நடுகல்லிற்கு கோவிலெழுப்பி வழிபாடு செய்யும் இவ்வூரார் (ஸ்ரீராமசமுத்திரம்) போற்றத்தக்கவராவர். (ப.107) 

….அவ்வூரில் (நத்தம்) ஒரு நம்பிக்கை. அங்கு ஒரு கற்சிலை உண்டு. என்ன சிலையென்று ஊரார் அறிந்திருக்கவில்லை. இச்சிலை எப்போதும் கவிழ்ந்தே கிடக்கும். ஊரில் தண்ணீர் பஞ்சம் வரும்போது இச்சிலையை பிரட்டி விடுவர். அன்று மழை பெய்யுமாம். மறுபடியும் வெள்ளக்காடாய் ஆனதும், மீண்டும் அச்சிலையைக் கவிழ்த்துவிடுவார்கள்….(ப.113)

…குத்துக்கற்கள் நட்டு வைக்கப்பட்ட திறந்த வெளியே அவ்வா தாத்தா கோயில் எனப்படுகிறது. பெரும் குத்துக்கல் தாத்தா எனவும், ஒன்றரை அடி உயரத்துடன் வணங்கிய நிலையில் உள்ள பெண் சிற்பம் அவ்வா (பாட்டி) எனவும் வழங்கப்படுகின்றன. பிற குத்துக்கற்கள் முன்னோர்களாகக் கருதப்பட்டு வணங்கப்படுகின்றன. (ப.145)

…கும்பகோணம், சார்ங்கபாணி கோவிலின் தேர்முட்டியில் உள்ள அரிகண்ட சிற்பம், தேரினை வலம் வர செய்ய தன்னுயிரை நீத்தவரைக் குறிக்கிறது. தேர் நின்று போகாமலும், நல்லபடியாக வலம் வரவும், அவ்வாறு நகர்ந்து வரும்போது நேர்த்திக்கடனாகச் சிலர் தம் இன்னுயிரை பலியிட்டுக் கொண்ட சம்பவம் நிகழ்ந்ததுண்டு.  (ப.170)

களப்பணியின்போது பதிவு செய்யப்படாத புதிய நடுகற்கள் சுமார் 25க்கு மேல் கண்டறிந்துள்ளதாக நூலாசிரியர்  குறிப்பிடுகிறார். முழு ஈடுபாட்டோடு குறிப்பிட்ட ஒரு துறையில் பயணித்து வரலாற்றுக்குப் பெரும் பங்களித்துள்ள முயற்சி போற்றத்தக்கது. சோழ நாட்டில் உள்ள நடுகற்கள் குறித்து  தனித்துவமான நூலை உருவாக்கிய நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

தலைப்பு : சோழநாட்டு நடுகற்கள்  (மன்னு பெரும் முன்னோர் மரபு)   
ஆசிரியர் : வே.பார்த்திபன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 050 தொலைபேசி 044-26251968/26258410
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, ஏப்ரல் 2025
விலை : ரூ
.180

12 May 2025

வேலைக்கு முதல் விண்ணப்பம் 12 மே 1976

“படிக்காட்டி முச்சந்தியில்தான் நிப்பே, படி” என்று கும்பகோணத்தில் வீட்டில் எங்கள் தாத்தா அடிக்கடி கூறுவார். எப்போதாவது அன்பாகவும் அறிவுரை சொல்வார். இவை சொந்தக்காலில் நிற்கவேண்டும், நேர்மையாக நடக்கவேண்டும், நல்ல பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்கவேண்டும் என்பன போன்ற எண்ணங்களை பள்ளிக்காலத்தில் விதைத்தது. 


மார்ச் 1975இல், கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவினை எதிர்பார்த்த நேரத்தில் வீட்டுச்சூழல் காரணமாக வேலையில் சேரவேண்டிய கட்டாயம் இருந்தது.  எந்நேரத்திலும் வேலையில் சேரத் தயாராக வேண்டும் என்ற இலக்கினை மனதில் கொண்டேன்.

2017இல், நான் படித்த பள்ளியின் நுழைவாயிலில்

அதற்காக என்னை ஆயத்தப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின் விடுமுறையில் கும்பகோணம், ஈஸ்வரன் தட்டச்சுப் பயிற்சி நிலையத்திலும், தொடர்ந்து பாரத் தட்டச்சுப் பயிற்சி நிலையத்திலும் ஆங்கிலத் தட்டச்சுக் கற்க ஆரம்பித்தேன். அதற்கு சற்று முன்பாக இந்தி பிராத்மிக் சேர்ந்து கற்க ஆரம்பித்திருந்தேன். கல்லூரிப் படிப்பைவிட இவை போன்ற கூடுதல் தகுதிகள் பணியில் சேருவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நண்பர்கள் கூறினர்.  அவ்வாறு நான் கற்ற ஆங்கிலமும், இந்தியும் பின்னாளில் நான் பணியில் சேர்ந்தபோது மிகவும் உதவின. அதே காலகட்டத்தில் நான் ஆங்கில இந்து நாளிதழ் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஏப்ரல் 1975இல் நடைபெற்ற தேர்வில் 600க்கு 311 மதிப்பெண்கள் பெற்று எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்ச்சி பெற்றேன். கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பி.யு.சி. சேர்ந்துபடிக்கவேண்டும் என்ற ஆசை என் மனதுள் ஓடிக்கொண்டிருந்தது.  படிக்க வசதியில்லை என்று கூறி, எங்கள் வீட்டில் என்னை கும்பகோணம், பெரிய தெருவிலுள்ள இருளப்பன் மிளகாய் மண்டியில் சேர்த்துவிட்டார்கள். என்னுடன் பள்ளியில் படித்த பல மாணவர்கள் கல்லூரியில் பி.யு.சி. சேர்ந்து படிக்கவிட்டார்கள்.  தொடர்ந்து மிளகாய் மண்டியில் வேலை பார்த்துவந்தேன். கல்லூரிக்குச் சென்ற நண்பர்களைப் பார்த்ததும் படிக்கும் ஆசை அதிகமானது. வீட்டைவிட்டு ஓடிவிடுவேன், காவிரியாற்றில் விழுந்துவிடுவேன் என்றெல்லாம் வீட்டிலுள்ளோருக்குப் பலவகையில் தொந்தரவு கொடுத்து பி.யு.சி.யில் சேர்ந்தேன். 

சேர்வதற்கு முன்பாக சிலர் தஞ்சாவூர் வேலை வாய்ப்பகத்தில்  பதிந்துவிட்டால் வேலை கிடைக்கு வாய்ப்புண்டு என்று கூறினர். அதன்படி வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்தேன். 1975இல் பதிவு செய்தபின்னர் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நேரில் சென்று புதுப்பித்துக்கொண்டேயிருந்தேன்.

கும்பகோணம் கல்லூரியில் பி.யு.சி. சேர்ந்து, மார்ச் 1976இல் நடைபெற்ற தேர்வில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். பின்னர் பி.ஏ. பொருளாதாரம் படித்ததும், வேலைக்குச் சேர்ந்ததும் தனிக்கதை.


பி.யு.சி. தேர்வெழுதி, தேர்வு முடிவிற்காகக் காத்திருந்தபோது வேலைக்கு விண்ணப்பங்கள் அனுப்ப ஆரம்பித்தேன்.  அவ்வாறாக முதன்முதலாக நான் தட்டச்சு செய்து அனுப்பிய விண்ணப்பத்தின் நகல் (கார்பன் காப்பி) இன்னும் என் கோப்பில் இருந்துகொண்டு, அந்நாள்களை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்பு, ஏக்கம் என்ற பல நிலைகளில் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை தொடர்ந்தது. சுமார்  50 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நான் எதிர்கொண்ட முதல் தட்டச்சு அனுபவம் வித்தியாசமானது. 17 வயதில் நான் தட்டச்சிட்ட கடிதம் இன்னும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. ஃபூல்ஸ்கேப் அளவுள்ள இரு தாள்களுக்கு இடையே அதே அளவு கார்பன் பேப்பரை ஆங்கிலத் தட்டச்சுப்பொறியில் வைத்து 1+1 தட்டச்சு செய்தேன். ஆசிரியர்களிடமும், சக நண்பர்களிடமும் கடிதத்திற்கான வரைவினைப் பற்றி அறிந்தேன். ஆங்கிலத்தட்டச்சுத் தேர்விற்காக நான் தட்டச்சிட்ட இரண்டாம் தாள் (I Paper Speed, Second Paper: Letters & Others) மூலமாக கடித அமைப்பைத் தெரிந்துகொண்டேன். அப்போதெல்லாம் ஏ4 அளவு தாள் பயன்பாடு கிடையாது.  கூகுளும் கிடையாது. 

பத்தியின் முதல் வாக்கியத்திற்கு அதிக இடைவெளிவிட்டது (ஐந்து எழுத்து இடைவெளி அல்லது ஒரு டேப் போதும்), எழுதிய சொற்கள் (“Having come to understand…”, “…abovesaid Factory, “…your Honour’s control”, ”Dear” என்பதற்குப் பதிலாக ”Respected”), வேலை வாய்ப்பக எண்ணைத் தந்தால் உடன் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அந்த எண்ணைப் பதிவு செய்தல் போன்ற உத்திகளைக் கடிதத்தில் பயன்படுத்தியதைப் பார்க்கும்போது எனக்கு வியப்பாக உள்ளது. எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறேன் என்றோ, முடித்திருந்த பி.யு.சி. தேர்ச்சி, தட்டச்சு அறிவு போன்ற தகுதிகளையோகூட நான் குறிப்பிடவில்லை. அப்படியிருந்தும், முதன்முதலாக நண்பன் வேலைக்காக தட்டச்சிட்ட கடிதம் என்ற வகையில் நண்பர்களும், தட்டச்சு நிறுவனத்தினரும் அதிகம் பாராட்டினர்.  அன்று முதல் இன்றுவரை தட்டச்சினை நான் ஒரு கலையாகவே கருதி வருகிறேன்.

தாத்தா, ஆத்தா, பெற்றோர், வளர்த்தவர்கள் ஆரம்ப காலத்தில் போட்ட வித்தானது படித்து முடித்து வேலையில் சேர்ந்தது முதல் என்னை பல வழிகளில் நன்னெறியில் நடத்திச்சென்றதை உணர ஆரம்பித்தேன். நான் பெற்ற இந்தப் பாடமே பின்னர் என் மகன்களை வாழ்வில் மூன்று Dக்கள் (Discipline, Decency மற்றும் Decorum) இருக்கவேண்டும் என்று கூறி வளர்க்க உதவியாக இருந்தது. வளரும் காலத்தில் தரப்படுகின்ற முக்கியத்துவம் வளர்ப்பவர்களுக்கு பெருமை சேர்ப்பதோடு, பிள்ளைகளை நன்னெறிக்கு இட்டுச்செல்லும்.

இன்னும் பாதுகாத்து வருகின்ற அதன் நகலைப் பார்க்கும்போதெல்லாம் நண்பர்களுடன்  அரட்டையடித்த நாள்களும்,  அதனை அனுப்பிவிட்டு பணி ஆணைக்காக தபால்காரரை எதிர்பார்த்த நாள்களும், கும்பகோணம், கே.ஜி.கே.தெருவின் அழகான எங்கள் வீடும் நினைவிற்கு வந்துவிடும்.  

02 January 2025

ஆவணப்படுத்தல் : 50ஆம் ஆண்டு

கும்பகோணத்தில் வீட்டிற்கு வரும் கடிதங்கள், வீட்டு வரி, மின்சார வரி ரசீதுகள், திருமண அழைப்புகள் போன்றவற்றை எங்கள் தாத்தா கம்பியில் குத்தி வைத்திருப்பார்.  சில சமயங்களில் முக்கியமான கடிதங்களை அதில் தேடிக் கண்டுபிடித்துவிடுவார். அந்த கடிதக் கம்பியில் எங்கள் தாத்தாவிற்கு பெருந்தலைவர் காமராஜர் எழுதிய கடிதத்தையும் நான் பார்த்துள்ளேன். தற்போது அது எதுவுமே இல்லை. நினைவில் மட்டுமே.


1976இல், எங்கள் தாத்தாவைப் பார்த்து அந்தப் பழக்கத்தை நான் ஆரம்பித்த நான் தற்போது 50ஆம் ஆண்டில் தொடர்கிறேன். நான்
செய்துவருகின்ற முக்கியமான பணிகளில் ஒன்று கடிதங்களை அவ்வப்போது கோப்பிலிடுதல் ஆகும்.  ஒவ்வொருவருடைய வாழ்வின் நிகழ்வுகளும் ஆவணப்படுத்தப்படவேண்டியது அவசியமானது.

1976இல் வேலை வேண்டி விண்ணப்பித்த கடிதத்தின் நகலிலிருந்து என்னுடைய ஆவணக்கோப்பு தொடங்குகிறது. பின்னர் இலக்கியம் (1983 முதல்), மொழிபெயர்ப்பு (1999 முதல்), ஆய்வு (1994 முதல்) என்று பல தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டது. ஆய்வு தொடர்பானவற்றை களப்பணி, ஆதாரங்கள், கண்டுபிடிப்புகள், கட்டுரைகள், நாளிதழ் செய்திகள் என்ற வகையில் பிரித்துள்ளேன்.

அவ்வப்போதைய நிகழ்வுகளைப் பதிவதோடு, அந்தந்த பகுப்பில் சேர்த்துவிடுவதால், எளிதில் கண்டுபிடித்துவிடலாம். நேரத்தை பயனுள்ள பிற பணிகளில் பயன்படுத்தலாம். இந்த அடிப்படை ஒழுங்கு பல நிலைகளில் நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவும். என் குடும்பத்தாருக்கும் இதனைப் பழக்கப்படுத்தி உள்ளேன். அவர்களும், என்னைப் பார்த்து சில நண்பர்களும் இந்தமுறையைக் கடைபிடித்து வருகின்றார்கள்.

வேலைக்கு அனுப்பிய முதல் விண்ணப்பம், எனக்கு வேலை கிடைத்ததாக வந்த முதல் தந்தி, பல்வேறு நிறுவனங்களுக்கு நான் வேலைக்காக அனுப்பிய விண்ணப்பங்கள், அதற்கான பணியாணைகள், முதன்முதலாக சைக்கிள் வாங்கியது, என் திருமண அழைப்பு தொடங்கி இல்லத்தின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான அழைப்பிதழ்கள், நாளிதழ் வார இதழ்கள், முக்கியப் பிரமுகர்களுடனான கடிதப்போக்குவரத்து என்ற வகையில் இவற்றில் ஆவணங்கள் உள்ளன. ஆரம்ப காலத்தில் பொருளடக்கம் அமைக்காமல் இருந்தேன். பின்னர் எளிதில் கண்டுபிடிக்க வசதியாக அந்தந்த ஆண்டிற்கான பொருளடக்கத்தை பொருண்மைவாரியாக அமைக்க ஆரம்பித்தேன்.

ஃபூல்ஸ்கேப் அளவு தாளில் ஆரம்பித்த அக்கோப்புகள் நாளடைவில் ஏ4 அளவிற்கு மாறின. அவ்வாறே சாதா அட்டை நூற்கட்டில் (wrapper binding) இருந்து தற்போது ஸ்பைரலுக்கு (spiral binding) மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதத்தையோ, குறிப்பிட்ட ஆவணத்தையோ பார்க்கும்போது அடைகின்ற மன நிறைவு அளவிடமுடியாதாதது. அது நம்மை அக்காலகட்டத்திற்கு அழைத்துச் சென்றுவிடும். ஒவ்வொரு முறை நூற்கட்டு செய்தபின்னர் அதனை ஒரு முறை முழுமையாகப் புரட்டிப் பார்த்துவிட்டு பாதுகாப்பாக வைக்கும்போது ஒரு பெரிய சாதனையைப் படைத்த நினைவு மனதில் தோன்றும். எழுத்து, வாசிப்பு, ஆய்வு என்ற பல நிலைகளில் என்னைத் திரும்பிப் பார்த்துக்கொள்ளவும்,  சுய மதிப்பீடு செய்துகொள்ளவும் இந்த முறை உதவுகிறது. 50 ஆண்டுகளாக மேற்கொள்ளும் இப்பணியை இனியும் தொடர்வேன்.