13 July 2025

கட்டுரைகள் (பௌத்தம், சமணம் தவிர)

வலைப்பூ வாசகர்களின் எளிதான வாசிப்புக்காக பௌத்தம், சமணம் தொடர்பான கட்டுரைகளை சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் தந்துள்ளேன். அவைதவிர்த்த பிற பொருண்மைகளில் நான் எழுதிய கட்டுரைகளைப் பற்றிய விவரங்களை இந்த வலைப்பூவில் இப்பதிவில் தந்துள்ளேன். இக்கட்டுரைகள் நான் பல்வேறு காலகட்டங்களில் பருவ இதழ்களிலும், நாளிதழ்களிலும் எழுதியவையாகும். அத்துடன் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. 

1995இல் எலியைத் தின்னும் கிழப்புலி என்ற சிறிய அறிவியல் துணுக்கு எழுத ஆரம்பித்து, 1997இல் ஞானசம்பந்தர் வாழ்வும் வாக்கும் என்ற கட்டுரைக்காக தொகுப்புப்பணியில் ஈடுபட்டு, பின் கட்டுரைகள் என்று எழுத ஆரம்பித்துத் தொடர்கிறேன். இதனை அவ்வப்போது மேம்படுத்துவேன். ஆதரவு தரும் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி.

சைவம்/கோயில்கள்/மகாமகம்

1. ‘‘ஞானசம்பந்தர் வாழ்வும் வாக்கும்’’, பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல், செப்டம்பர் 1997, உரை தொகுப்பு, பக்.5-8

2. ‘‘தஞ்சைப்பெரிய கோயிலில் திரிபுராந்தகர்’’, தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப்பெருவிழா மலர், 9.6.1997, பக்.170-174

3. ‘‘குன்றக்குடியும் திருப்புகழும்’’, தமிழ் மரபும் முருக வழிபாட்டு நெறியும் கருத்தரங்கம், பழனி, ஆகஸ்டு 1998 (கருத்தரங்கிற்காக அனுப்பப்பட்டது, வெளியாகவில்லை)

4. ‘‘பழைசை மழபாடியில் திருஞானசம்பந்தர்’’, பட்டீஸ்வரம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர், பக்.36-38

5. ‘‘உமாபதி சிவாச்சாரியார் அருளிய சிவப்பிரகாசம்’’, மெய்கண்ட சித்தாந்த சாத்திரம் (சொற்பொழிவுகள்), சைவ சித்தாந்தப் பெருமன்றம், தஞ்சாவூர், 1999, பக்.98-109 (தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆற்றிய உரையின் அச்சு வடிவம்)

6. ‘‘பிள்ளையார் பெற்ற முத்துச்சிவிகை’’, பெரிய புராண ஆய்வு மாலை, தொகுதி 2, பெரிய புராண இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி, 2001, பக்.686-691

7. ‘‘திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில்’’, தமிழ்நாட்டுச்சிவாலயங்கள், தொகுதி 2, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004, பக்.244-252

8. ‘‘தஞ்சாவூர் மாவட்டக் கற்றளிகளுக்கு புதுக்கோட்டை மாவட்டப் பங்களிப்பு’’, தமிழ்ப்பொழில்ஜூன் 2003, துணர் 77, மலர் 2, பக்.63-70 (முன்னர் புதுக்கோட்டையில் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரையின் அச்சு வடிவம்)

9. ‘‘சப்தஸ்தானத் தலங்கள்’’, மகாமகம் சிறப்பு மலர் 2004, பக்.40-45

10.‘‘சிவகுரு தரிசனம் திருவடிப்பேறு’’, திருமந்திர ஆய்வுரைக் களஞ்சியம், திலகவதியார் திருவருள் ஆதீனம், புதுக்கோட்டை, 2005, பக்.372-379

11. ‘‘தேவாரம் பாடாத கோயில்’’தி இந்து, ஆனந்த ஜோதி, 9.7.2015

12. கோயில் உலா 1, பத்திரிகை.காம், 27 ஆகஸ்டு 2015

13. கோயில் உலா 2, பத்திரிகை.காம், 27 ஆகஸ்டு 2015

14.கோயில் உலா 3, பத்திரிகை.காம், 4 செப்டம்பர் 2015

15. கோயில் உலா : குடந்தை கோயில்கள், பத்திரிகை.காம், 23 அக்டோபர் 2015

16. மகாமக கோயில்களை தரிசிக்கலாம், வாருங்கள்பத்திரிகை.காம், 20 நவம்பர் 2015

17. மகாமக ஸ்பெஷல் : குடந்தை கோயில் வலம், பத்திரிகை.காம், 4 ஜனவரி 2016

18. மகாமக ஸ்பெஷல் கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் உலாபத்திரிகை.காம், 29 ஜனவரி 2016

19.”கோயிற்கலை போற்றும் மகாமகம்”, கும்பகோணம் மகாமகம் 2016, சிறப்பு மலர், இந்து சமய அறநிலையத்துறை, சென்னை, பக்.65-69

20. ‘‘நாகேஸ்வரர் ஆலய உலா’’, மகாமகம் முன்னோட்டம், தி இந்து, 28.1.2016

21. ‘‘இறைவனுக்கு விலகிய நந்தி’’, தினமணி, வெள்ளி மணி, 19.1.2016

22. ஐந்து மகாமகம் கண்ட அனுபவங்கள்பத்திரிகை.காம், 1 மார்ச் 2016


அறிவியல்

1. ‘‘எலியைத்தின்னும் கிழப்புலி”, அறிவியல் துளி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், ஜனவரி 1995, ப.4

2. ‘‘ஆண் குதிரை கருத்தரிக்கும்”, அறிவியல் துளி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், ஜனவரி 1995, ப.4

3. ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அறிக அறிவியல் இதழின் பங்கு”, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 1995, பக்.415-419

4. ‘‘ஓட்டுநருக்கு நற்செய்தி”, அறிவியல் துளி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், மார்ச் 1996, ப.1

5. ‘‘மாசு படியும் தாஜ்மஹால்’’, தமிழக அறிவியல் பேரவை, நான்காம் கருத்தரங்கு, கோயம்புத்தூர், 1996, ப.280

6. ‘‘மனிதப்படி உருவாக்கம் ஒரு பார்வை’’, தமிழக அறிவியல் பேரவை, ஐந்தாவது கருத்தரங்கு, அண்ணாமலைநகர், 1997, ப.53

7. ‘‘உயிர் வார்ப்புகள் ஒரு விவாதம்’’, தி வீக், ஆங்கில இதழ் 16 மார்ச் 1997 இதழிலிருந்து தமிழாக்கம், அறிக அறிவியல்ஜூன் 1997, பக்.7-12

8.‘‘தமிழ் இதழ்களில் அறிவியல் செய்தி மொழிபெயர்ப்பு : படியாக்கம் (Cloning)’’, அறிவியல் தமிழாக்கம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 1997, பக்.125-135

9. ‘‘நிழலும் நிஜமும் உயிர்ப்படியாக்கம்’’, அறிக அறிவியல்ஜூன் 1998, பக்.29-30

10. ‘‘மனிதப்படி உருவாக்கம் : ஒரு வரலாற்றுப்பின்னணி’’, காலந்தோறும் அறிவியல் தொழில்நுட்பம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 1998, பக்.78-84

11. ‘‘உயிர்ப்படியாக்கம் ஒரு வரலாற்றுப்பின்னணி’’, அறிக அறிவியல், ஆகஸ்டு 1998, பக்.8-9

12. ‘‘அம்மா டாலிக்கு வயது இரண்டு’’, அறிக அறிவியல், அக்டோபர்1998, பக்.21-23

13. ‘‘படியாக்க நிகழ்வு : 1997’’, பொது அறிவியல், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 1999, பக்.346-352

14. ‘‘அறிவியல் தமிழ் வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் தேவை : 1997இன் அரிய அறிவியல் சாதனைகள்’’, அறிவியல் தமிழ் வளர்ச்சி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 1999, பக்.141-147

15. ‘‘2000ஆம் ஆண்டின் மிகச் சிறந்த அறிவியல் ஆய்வுகள்’’, அறிக அறிவியல், மே 2001, பக்.21-24

16. ‘‘2000 வரை படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, உயிர் தொழில் நுட்பவியல், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 2002, பக்.85-97

17. ‘‘2002இல் படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, பல்துறைத் தமிழ், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 2003, பக்.79-88

18. ‘‘2001இல் படியாக்கத்தின் வளர்ச்சி நிலை’’, தமிழ்ப்பொழில், ஆகஸ்டு செப்டம்பர் 2003, துணர் 77, மலர் 4 மற்றும் 5, பக்.150-158

19. ‘‘2003இல் படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், மார்ச் 2004, துணர் 77, மலர் 11, பக்.392-405

20. ‘‘காட்டு மிருகங்கள் படியாக்கம்’’, அறிக அறிவியல், டிசம்பர் 2004, ப.29

21. ‘‘2004இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், நவம்பர் 2005, துணர் 80, மலர் 7, பக்.276-280, ஜனவரி 2007, துணர் 80, மலர் 9, பக்.349-360 (இரு இதழ்கள்) 

22. ‘‘2005இல் படியாக்கத் தொழில்நுட்பம்’’, இந்திய அறிவியல் தொழில் நுட்பம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், 2006, பக்.271-280 

23. ‘‘2006இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், ஆகஸ்டு, துணர் 83, மலர் 2, பக்.199-200  (மூன்று இதழ்களில் தொடர்ந்து) 

24. ‘‘2006இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், செப்டம்பர், துணர் 83, மலர் 5, பக்.223-236

25. ‘‘2006இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, டிசம்பர் 2008, துணர் 83, மலர் 9, பக்.361-364  

26. ‘‘2007இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், பிப்ரவரி 2009, துணர் 84, மலர் 2, பக்.47-52

27. ‘‘2008இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், நவம்பர் 2011, துணர் 86, மலர் 11, பக்.421-430

28. ‘‘2009இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, வாழும் தமிழ், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், 2011, பக்.103-108


பிற பொருண்மைகள்

1. ‘‘சாமுவேல் ஜான்சன்’’, தமிழ் அகராதியியல் செய்தி மலர்,  சனவரி-சூன் 1998, ப.5

2. ‘‘உலகப்பெரும் அகராதி”, தமிழ் அகராதியியல் செய்தி மலர்ஜூலை-டிசம்பர் 1998, ப.3

3. ‘‘அனைத்துக்காலத்திற்கும் பொருந்தும் கதாநாயகன் (சே குவாரா)’’, ஜான் செரியன், மொழிபெயர்ப்பு, நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம், நவம்பர் 2008, பக்.41-44 

4. ‘‘ராஜராஜன் நேருவின் பார்வையில்’’, தினமணி, கொண்டாட்டம், 26 செப்டம்பர் 2010, ப.1

5. ‘‘நிதானமான வாசிப்பு ஒரு கலை’’, தமிழ் இன்று வலைப்பூ, அக்டோபர் 2010 

6. ‘‘நிதானமான வாசிப்பு ஒரு கலை”, செய்தி மலர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், 15.3.2011, பக்.1-4

7. ‘‘வாசிப்பை நேசிப்போம், பணியாளர் குரல், தமிழ்ப்பல்கலைக்கழகப் பணியாளர் சங்கம், பிப்ரவரி 2012, ப.5

8.“A Writing on Reading”, Current Trends in Linguistics, Tamil University, Thanjavur, 2013, pp.171-176



14. ‘‘கலாமும் நானும் : மறக்க முடியாத இரு நிகழ்வுகள்’’, தினமணி கலாம் சிறப்பு மலர், 2015, ப.166

15.”சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம், கும்பகோணம்”, மகாமகம் 2016, சிறப்பு மலர், சரசுவதி மகால் நூலகம், பக்.83-88


18. ‘‘எழுத்தாளர்களை உருவாக்கிய அறிஞர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம்’’, தொகுப்பு புலவர் ம.அய்யாசாமி, விழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம், பக்.109-112

19."மாமனிதரின் வான்புகழ்", திரு கோ.சு.சாமிநாத செட்டியார் நூற்றாண்டு மலர், (தொகு) சீ.தயாளன், சி.கோடிலிங்கம், சிவகுருநாதன் நூலகம், கும்பகோணம், 29.10.2017, பக்.63-67 

20. "கடிதம் செய்த மாற்றம்", தினமணி, மகளிர் மணி, 3 அக்டோபர் 2018, ப.3

21. "அது ஒரு பொற்காலம்", தினமணி, 4 நவம்பர் 2018, ப.xii


23."ஏடகம் வரலாற்று உலா 1", தொகுப்பாசிரியர் கரந்தை ஜெயக்குமார், பதிப்பாசிரியர் மணி.மாறன், ஏடகம் ஆண்டு மலர் 2017-18,  தஞ்சாவூர், பக்.27-33 

24. "கேட்டு வாங்கிப்போடும் கதை  : பிரசவங்கள்", எங்கள் ப்ளாக்,  வலைப்பூ 13 நவம்பர்  2018

25. "இலக்கை நோக்கும் உயரமான பெண்" , தினமணி, மகளிர் மணி, 28 நவம்பர் 2018, ப.4

26. "மைசூர் மெழுகுச் சிலை அருங்காட்சியகம்", கால நிர்ணய், 2019

28. "உலக அரசியல் களத்தில் மகளிர்", தினமணி, 17 ஏப்ரல் 2019, ப.1

29. "2018இன் சிறந்த சொல் நெகிழி", ஏடகம், திகிரி, ஏப்ரல்-ஜூன் 2019 ஏடு 1 அகம் 2, பக்.2-6

30. "மாற்றத்திற்கான மங்கை கிரேட்டா தன்பர்க்", தினமணி, மகளிர் மணி, 4 செப்டம்பர் 2019, ப.3

31. "ரியலி கிரேட்டா தன்பர்க்", புதிய தலைமுறை பெண், அக்டோபர் 2019, பக்.88-89

32. "மொழியாக்கம் ஒரு கலை", தினமணி இணைய தளம், 24 டிசம்பர் 2019

33. "நேருவின் பார்வையில் ராஜராஜன்", தினமணி இணைய தளம், 4 பிப்ரவரி 2020, "தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நினைவாக (தினமணி, 26 செப்டம்பர் 2010 இதழில் முதன்முதலில் வெளியானது)

34. "வியக்க வைக்கும் விக்கிப்பீடியா பதிவர்"புதிய தலைமுறை, 13 பிப்ரவரி 2020, பக்.30-31

35."கேட்டு வாங்கிப்போடும் கதை" : எதிரும் புதிரும், எங்கள்பிளாக் வலைப்பூ, 21 மார்ச் 2017

36."என்னைப்பற்றி நான்"மனசு வலைப்பூ, 19 ஏப்ரல் 2017 

37. "மைக்ரோசிப் : அனுசரணையா? ஆபத்தா?, பத்திரிகை.காம்,13 செப்டம்பர் 2017 

38. சே குவாராவின் இறுதி நிமிடங்கள், கிளையர் பூபையர், மொ.பெ. பத்திரிகை.காம், 9 அக்டோபர் 2017

39. ‘‘என்றென்றும் நாயகன் சே குவாரா’’, மொழிபெயர்ப்பு, சே குவாரா 50ம் ஆண்டு நினைவு தினம், தி இந்து, 9.10.2017, ப.6 

40. இந்திரா காந்தி பிறந்த நாள் : நேரு எழுதிய கடிதங்கள், பத்திரிகை.காம், 19 நவம்பர் 2017

41. ‘‘2017ன் சிறந்த சொல்’’தி இந்து, 7.1.2018, ப.8 
43. "உலகின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின்", தினமணி இணைய தளம், மகளிர் தின சிறப்புப்பக்கம், 8 மார்ச் 2020

45. "உரிய நேரத்தில் உறங்கச்செல்லும் குழந்தைகள் செய்யும் குறும்பு குறைவே", கார்டியன், மொ.பெ., விடுதலை ஞாயிறு மலர், 23.5.2020, ப.9 

47. "அயலக இதழ்கள் புகழாரம் சூட்டிய அப்துல் கலாம்", முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நினைவஞ்சலி, தினமணி, 27 ஜூலை 2020

48. "15 நிமிட நகரம்"தினமணி, 7 அக்டோபர் 2020

49. "உலக வரலாறு அறிவோம் ", இந்திரா காந்தி நினைவு நாள், இந்து தமிழ் திசை, 31.10.2020, .6

50."தீபாவளி நினைவுகள்",  வண்ணமயமான தீபாவளி, தினமணி, 14 நவம்பர் 2020

51. "ஆக்ஸ்போர்டு அகராதியின் எதிர்பாரா ஆண்டின் (2020) சொற்கள்", ஏடகம், திகிரி, ஏப்ரல்-ஜூன் 2021 ஏடு 3 அகம் 1

52."ஜெர்மானிய இளைஞர்களின் 2020ஆம் ஆண்டின் சிறந்த ஆங்கிலச்சொல்", ஏடகம், திகிரி, ஜூலை-செப்டம்பர் 2021 ஏடு 3 அகம் 2

53. "தீபாவளி நினைவுகள்", தேன் சிட்டு, தீபாவளி மலர் 2021 (தினமணியில் வெளியான கட்டுரை)

54. "2018இன் சிறந்த சொல்", திகிரி கட்டுரைகள், பதி.முனைவர் மணி. மாறன், க.முரளி, ஏடகம், தஞ்சாவூர், 2021, பக்.29-33

55."ஏடகம் தொல்லியல் தடம் தேடி, வரலாற்று உலா", தொகுப்பாசிரியர் கரந்தை ஜெயக்குமார், பதிப்பாசிரியர் மணி.மாறன், ஏடகம் ஆண்டு மலர் 2018-19,  தஞ்சாவூர், பக்.28-38


அணிந்துரை/வாழ்த்துரை/மதிப்புரை

1. மர்மவீரன் ராஜராஜ சோழன், சித்திரக்கதை, கதை, சித்திரம் சந்திரோதயம், அணிந்துரை, 2005 

2. சங்ககாலச் சோழர் வரலாறு, சமுதாய, சமய, பொருளாதார நிலை, டாக்டர் வீ.மலர்விழி, அணிந்துரை, 2008

3. சோழர் கால கட்டடக்கலையும், சிற்பக்கலையும், டாக்டர் வீ.மலர்விழி, அணிந்துரை, 2008

4. ஸ்ரீகாத்தாயி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா, முனைவர் வீ.ஜெயபால், அணிந்துரை, 9.4.2009 

5. திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி மையம் இருபதாம் ஆண்டு நிறைவு விழா மலர், 2010-2011, ப.ஆ.முனைவர் வீ.ஜெயபால், வாழ்த்துரை, 26.11.2011

6. ஆயிரம் ரூபாய் நோட்டு, அழகிரி விசுவநாதன்,  அணிந்துரை, 2012  

7. இந்த எறும்புகள், கவிஞர் அவிநா (அழகிரி விசுவநாதன்), அணிந்துரை, 2012 

8. கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கி.ஜெயக்குமார், வாழ்த்துரை, 2012 

9.சுவடிப்பாதுகாப்பு வரலாறு, முனைவர் ப.பெருமாள், மதிப்புரை, 2014

10. ‘‘மனிதரில் மாணிக்கங்கள்’’, தினமணி புத்தாண்டு மலர் 2014, பக்.112-126

11. ‘‘எனக்குப் பிடித்த புத்தகம் Nelson Mandela-Long Walk to Freedom’’, தினமணி கதிர், 14.12.2014, ப.4

12. திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி மையம் இருபத்திநான்காம் ஆண்டு நிறைவு விழா மலர், 2014-2015, ப.ஆ.முனைவர் வீ.ஜெயபால், வாழ்த்துரை, 2015

13. தேவகோட்டை தேவதை தேவகி, கில்லர்ஜி, அணிந்துரை, 2016 

14. கும்பகோணத்தில் ஓர் அறிவுத்திருக்கோயில், முனைவர் ச.அ.சம்பத்குமார்,   வாழ்த்துரை, 2017

15. காலம் செய்த கோலமடி, துளசிதன் வே.தில்லையகத்து, அணிந்துரை, மே 2018   

16. பெரிய புராண நாடகங்கள் : ஒரு பன்முகப்பார்வை, முனைவர் வீ.ஜெயபால்,  அணிந்துரை, 30 அக்டோபர் 2019


17. புத்தகமும் புதுயுகமும், ச.அ.சம்பத்குமார், இரண்டாம் பதிப்பு, 12.8.2019, வாழ்த்துரை (பெற்ற நாள் 16 பிப்ரவரி 2020)

18. தர்ப்பண சுந்தரி, எஸ்.வி.வேணுகோபாலன், புக் டே, 26 ஜூன் 2020

19. மலர்ந்தும் மலராத, எஸ்.வி.வேணுகோபாலன், புக் டே, 6 டிசம்பர் 2020

20. இலக்கணம் இனிது, நா.முத்துநிலவன், புக் டே, 18 மார்ச் 2021

21. சொல்லேர், அண்டனூர் சுரா,  புக் டே, 30 மார்ச் 2021

22. சோழர் வரலாற்றில் மச்சபுரீஸ்வரர், கோ.தில்லை கோவிந்தராஜன்,  புக் டே, 1 நவம்பர் 2021

23. திருக்குறள்-சிறப்புரை, முனைவர் இரெ.குமரன்,  புக் டே, 26 நவம்பர் 2021

24.தஞ்சையும் அரண்மனையும், முனைவர் மணி.மாறன், புக் டே, 27 ஜனவரி 2022 

25. சிற்பி வித்யா சங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும், எஸ்.ஜி.வித்யா சங்கர் ஸ்தபதி,  புக் டே, 1 நவம்பர் 2022

26.தமிழர் சிற்பக்கலையில் அழகியல் கோட்பாடுகள், சு. திருநாவுக்கரசு,

27.பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும், முனைவர் ஆ.ராஜா, புக் டே, 6 செப்டம்பர் 2023

28.பனை உறை தெய்வம், குடவாயில் பாலசுப்ரமணியன், புக் டே, 5 மார்ச் 2024

29.சிற்பக்கலை, முனைவர் க.மணிவண்ணன், 8 நவம்பர் 2024

30.வரலாற்றில் ஐயம்பேட்டை, என்.செல்வராஜ், புக் டே, 1 டிசம்பர் 2024

யுட்யூப் /பிற பதிவுகள்


2.விக்கிப்பீடியாவில்தமிழகக் கோவில்கள் - அனுபவக் கட்டுரைகள், சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, GCHRG WEBINARS 2020| PART-3 | Webinar 8,

6 செப்டம்பர் 2020


3.விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உருவாக்குதல், பூ.சா.கோ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை, இணையவழித் தமிழ்க் கற்றல் கற்பித்தல் ஏழு நாள் இணையவழிப்பயிலரங்கம், முதல் நாள் உரை, 15 மார்ச் 2021


4."வாசிப்பை நேசிப்போம்", தஞ்சாவூர் புத்தகத் திருவிழா 2023,  17 ஜூலை 2023


5."கள ஆய்வில் தடம்", காவிரி இலக்கியத் திருவிழா 2024,  22 மார்ச் 2024


--------------------------------------------------------------------------------------------

பௌத்தம், சமணம் தொடர்பான கட்டுரைகள், அணிந்துரை, யுடியூப் பதிவுகளுக்கான இணைப்பு : சோழ நாட்டில் பௌத்தம்

--------------------------------------------------------------------------------------------


09 June 2025

அறம் பயில்வோம் : கு.பாலசுப்ரமணியன்

கும்பகோணம், காந்தியடிகள் நற்பணிக்கழக இதழில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 53 கட்டுரைகளின் தொகுப்பாக அறம் பயில்வோம் என்ற நூலினை வெளியிட்டுள்ளார் நூலாசிரியர் கு.பாலசுப்ரமணியன்.  



அறம் வளர்த்த தலைவர்கள், கல்வி, அரசியல் சமுதாயப்பார்வை, சிறுகதைகள் என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட இந்நூல் அறத்தைக் கற்கவும், அதனைத் தொடரவும் ஓர் உந்துதலைத் தருகிறது. பெரும்பாலானவை அறம் என்ற பின்புலத்தில் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. நூலைப் படித்து முடிந்தபின் நம்முள் அறம் என்ற சிந்தனை துளிர்த்துப் பரவுவதை உணரமுடியும். நூலின் சில கட்டுரைகளைக் காண்போம்.


முதல் உட்தலைப்பின்கீழ் காந்தி, நேரு, காமராஜர், மொரார்ஜி தேசாய், லால்பகதூர் சாஸ்திரி உள்ளிட்ட தலைவர்களின் சாதனைகள் விவாதிக்கப்படுகின்றன. காந்தியின் தாரக மந்திரம் கரோ பஹலே, கஹோ பீச்சே..உலகம் மாசுபடுவதற்கான சுற்றுச்சூழலில் விஷம் கலப்பதற்கான அனைத்துச் செயல்களையும் செய்துகொண்டே அதைப்பற்றிப் பேசுவது நகை முரண் இல்லையா? (ப.3) காந்தியைப் பற்றிய தவறான புரிதலைப் பரப்பும் அறிவுஜீவிகளிடமிருந்து காந்தியைக் காப்பாற்றுவது நமது கடமை (ப.7). மதச்சார்பின்மையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டவராக நேருவை நம்பியதால் தன்னுடன் பல வகையில் முரண்பாடு கொண்ட நேருவை அரசியல் தன் அரசியல் வாரிசாக அறிவித்தார் காந்தி. (ப.12)


நேரு, தான் ஆட்சி செய்த 17 ஆண்டு காலத்தில் வட இந்தியாவைவிட தென் இந்தியாவிலேயே அதிக செல்வாக்கு பெற்றவராக விளங்கினார். (ப.21) நேருத என்றால் நமக்குத் தோன்று மதச்சார்பின்மைதான். (ப.26) சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட ஜனநாயக சோசலிசம் என்ற ஒரு புதிய தத்துவத்தை இந்தியாவின் முன் மட்டுமல்ல உலகின் முன் வைத்தார் நேரு. (ப.31) நேரு, காமராஜரை அவரது நேர்மைக்காகவும் எளிமைக்காகவும் மதித்தார். (ப.41)


உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இவை அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதே காமராஜரின் சிந்தனையாக இருந்தது. (ப.50) அனைத்துக் கல்வியும் இலவசம், அனைவருக்கும் இலவசம் இதுதான் காமராஜர் ஆட்சி. (ப.59) பச்சைத்தமிழன் ஆட்சி..தரமான இலவசக்கல்வி, மது கண்டறியாத மக்கள், அரசியல் தலையிடா காவல்துறை, ஓட்டுகளை எதிர்பார்க்கா திட்டங்கள், கரைபடியா கரம்கொண்ட அமைச்சர்கள்...(ப.66)


அறமே மெய்யின்பம்..அறனையே துணை எனக்கொள்வோம் எனக் கூற பாரதி தேவை. அவ்வாறே பாரதியின் முற்போக்குச் சிந்தனைகள் இக்காலத் தேவையாகும். (ப.72)


கல்வி, அரசியல் சமுதாயப்பார்வை என்ற உட்தலைப்பில் உள்ள கட்டுரைகள் தற்கால அரசியல், பொருளாதார, சமுதாயப்பார்வையைத் தருகின்றன. தனியார்மயமாக்கப்பட்ட கல்வியால் தாய்மொழிக்கல்வி புறக்கணிப்பு, சமூகப்பொறுப்பு பற்றிய அறிவுரை நிறுத்தப்படல், கல்விச்செலவுக்காகக் கடன்பட்ட வாழ்க்கை, மனப்பாடம் செய்யும் நிலை, மாணவர்களிடம் காட்டிய கண்டிப்பு குறைவு, மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாறல், வணிக நோக்கு. (ப.93) நீட் தேர்வு மாணவர்கள் மீது ஏவிவிடப்பட்ட விஷம் தோய்ந்த அஸ்திரமாகும். (ப.101).

அரசியல் என்பது தொண்டா? வணிகமா? பிழைப்பா? என்றில்லாமல் அரசியல் அறம் என மாற்றப்படவேண்டும். அது அறம் சார்ந்த அரசியலை விரும்புவோர் எண்ணிக்கை மிகும் காலத்தில்தான் மெய்ப்படும். அதற்குக் காத்திருப்பதைத் தவிர வேறுவழியில்லை. (ப.116)


மதம், சாதி, இனம், தீண்டாமை, மது, மூடப் பழக்கவழக்கங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிலிருந்து விடுபடும் நாளே பாரதி கனவு கண்ட விடுதலை நாள். (ப.127) லஞ்சம் உள்ள இடத்தில் ஊழலும், ஊழல் உள்ள இடத்தில் லஞ்சமும் இணைந்தே வாசம் செய்யும். இவை நமது அறப்பண்புகளை அளித்து நம்மை மனிதத்தன்மை அற்றவர்களாக மாற்றுகின்றன. (140).


நூலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் ஊடாக அறம் என்பதானது பரிணமிப்பதைக் காணலாம்.


இவ்வகையில் இந்நூலில் அறம் என்ற கோட்பாடானது நூல் முழுவதும் விரவியிருப்பதைக் காணமுடிகிறது. அறம் சார்ந்த வாழ்க்கை பல்வகையில் நம்மை உயர்த்தும் என்பதையும், அறத்தை உணர்ந்து பின்பற்றும்போது கிடைக்கும் விளைவுகள் நல்ல பயனைத் தரும் என்பதையும் நூலாசிரியரின் எழுத்து உறுதி செய்கிறது. நன்னெறிகள் கொண்ட ஓர் அரிய நூலைப் படித்த எண்ணத்தைத் தருகின்ற இந்நூலை வாசித்து, அறநெறியைக் கடைபிடிக்க முயல்வோம். அற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்ற நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.


தலைப்பு : அறம் பயில்வோம்   

ஆசிரியர் : கு.பாலசுப்ரமணியன் 
அலைபேசி : 
 99527 93520
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, மே 2025
விலை : ரூ.250

50ஆவது ஆண்டு விழா (5, 7, 8 ஜூன் 2025)


முதல் நாள் நிகழ்வு






இரண்டாம் நாள் நிகழ்வு







அறம் பயில்வோம் நூலை பா.ஜம்புலிங்கம் வெளியிட மா.இரமேஷ்பாபு பெறல்

விழா நினைவுப்பரிசினை சு.செல்வம் வழங்க, பா.ஜம்புலிங்கம் பெறல்

நூல் வெளியிட்ட பின் உரையாற்றல்


மூன்றாம் நாள் நிகழ்வு





காந்தியடிகள் நற்பணிக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் அங்கு நானும், என்னுடைய நண்பர்கள் சிலரும் இந்தி வகுப்பில் சேர்ந்தோம். நான் ராஷ்ட்ரபாஷா வரை தேர்ச்சி பெற்றேன். அப்போது நான் கற்ற இந்தியானது சென்னையில் முதன்முதலாகப் பணியில் சேர்ந்தபோதும், கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின்போதும்,  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப்பட்ட ஆய்வு மேற்கொண்டபோதும்,  வட இந்தியக்கோயில்களுக்குச் சென்றபோதும். எனக்குப் பெரிதும் உதவியது. அவ்வப்போது இன்றும் துணையாக நிற்கிறது. 
அறம் பயில்வோம் நூலினை வெளியிடும் வாய்ப்பினைத் தந்த காந்தியடிகள் நற்பணிக்கழகத்திற்கு நன்றி.

----------------------------------------------------------------------------

ஒளிப்படங்கள் நன்றி : திரு குடந்தை ஆடலரசன், திரு சு.செல்வம்,

காந்தியடிகள் நற்பணிக்கழகம்

----------------------------------------------------------------------------

19 May 2025

மனதில் நிற்கும் இந்தி வகுப்புகள் (1977-79)

1970களின் இடையில்..கும்பகோணம் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் காவிரியாற்றுக்குச் செல்லும் வழியில் மூர்த்திச்செட்டித் தெரு, பாட்றாச்சாரியார் தெரு தெருக்களை அடுத்து இடது புறத்தில் கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் உள்ளது. அங்கிருந்து சிறிது தூரத்தில் வலது புறத்தில்  நாங்கள் தட்டச்சுக்குச் சென்ற ஈஸ்வரன் தட்டச்சுப் பயிற்சி நிறுவனம் ஒரு வீட்டின் மாடியில் இயங்கிவந்தது. அதன் எதிரே வலது புறத்தில் கும்பகோணம் கூட்டுறவு பால் சொஸைட்டியும், இடது புறத்தில் ரேஷன் கடையும் இருந்தன. தட்டச்சுப் பயிற்சி முடிந்தபின் கீழே இறங்கிவருவோம். முதலில் ஆங்கிலத் தட்டச்சு கற்றுக்கொண்டோம். என்னுடைய ஆரம்பக் காலத் தட்டச்சுப் பயிற்சி இங்குதான். பின்னர் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட, பாரத் தட்டச்சுப் பயிற்சி நிறுவனத்தில் (தற்போது கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் உள்ளது) சேர்ந்து ஆங்கில, தமிழ் தட்டச்சிலும், ஆங்கில, தமிழ் சுருக்கெழுத்திலும் தேர்ச்சி பெற்றேன். அது ஒரு தனி அனுபவம்.

தட்டச்சு நிறுவனம் இயங்கிய வீட்டின் கீழே திண்ணையில் ஒருவர் இந்தி வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார். அவரிடம் நானும், செல்வம் (பழைய அரண்மனைத்தெரு), ஐயப்பன் (முத்துப்பிள்ளைமண்டபம்), உள்ளிட்ட பல நண்பர்களும் ஆரம்ப காலத்தில் இந்தி கற்றுக்கொண்டோம். 

எங்கள் அப்பா என்னை பல ஆங்கில, இந்தித் திரைப்படங்களுக்கு அழைத்துச்சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து, மொழி தெரியாமல் பாபி, ஷோலே, தீவார் போன்ற இந்தித் திரைப்படங்களைப் பார்த்த சில ஆண்டுகளில்தான் இந்தி வகுப்புக்குச் சென்றோம்.  ஆசிரியர் நடத்திய விதம் எங்களுக்கு எளிதாகப் புரிந்தது. தெரியாத சொற்களுக்கு அவ்வப்போது பொருள் கேட்டுத் தெரிந்துகொள்வோம். நாங்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பொருள் கூறுவார். 

காந்தியடிகள் நற்பணிக்கழகம், காலசந்தி கட்டளை
(ஏப்ரல் 2025இல் சென்றபோது எடுத்த ஒளிப்படம்)

பிறகு, 1970களின் இடையில் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் ஆரம்பிக்கப்பட்ட காந்தியடிகள் நற்பணிக்கழகத்தில் (தற்போது காலசந்தி கட்டளையில் செயல்பட்டுவருகின்றது) இந்தி வகுப்பினைத் தொடர்ந்தேன். என்னுடன் பள்ளி நண்பர்களான  ராஜசேகரன் (16 கட்டு, திருமஞ்சன வீதி)மதியழகன் (திருமஞ்சன வீதி), மோகன் (சிங்காரம் செட்டித்தெரு), ஐயப்பன் (முத்துப்பிள்ளை மண்டபம்) படித்த நினைவு.  

நான் ப்ராத்மிக் (பிப்ரவரி 1978), மத்யமா (ஆகஸ்டு 1978), ராஷ்ட்ரபாஷா (பிப்ரவரி 1979)  ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றேன். பணிக்குச் சென்றபின்னர் பிரவேசிகாவில் தேர்ச்சி பெற்றேன். சிலர் இடையிலே நின்றுவிட்டனர். எங்களில் மோகன் மட்டும் ப்ரவின் வரை படித்தார். பின்னர் நான் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபோது மோகன் எனக்கு  இந்தியில் கடிதம் எழுதியதும் நான் பதில் எழுதியதும் நினைவில் உள்ளது. 

1979இல் சென்னையில்  முதன்முதலாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த போது அங்கு ஆங்கிலமும், இந்தியும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டதைக் கண்டேன். நான் கற்ற இந்தி எனக்கு அப்போது கைகொடுத்தது. சேர்ந்த சில நாள்களில் அந்நிறுவன மேலாளர் என்னிடம்  டில்லியில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையலுவலகத்திலிருந்து  அவ்வப்போது தொலைபேசி அழைப்பு வருமென்றும், பெறப்படும் செய்தியைத் தட்டச்சுச் செய்துதரவேண்டும் என்றும் கூறினார். அதற்கு முன்னர் ஓரிரு முறை தான் நான் தொலைபேசியில் பேசியுள்ளேன். அதிகம் நான் தொலைபேசியில் பேசியது வழக்கமில்லை என்று கூறியபோது அவர் என்னை ஊக்கப்படுத்தி அனுபவத்தில் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம் என்றார். அவர்கள் இந்தியில் பேசக்கூட வாய்ப்புள்ளது என்றார். அவ்வாறான ஒரு சூழலை எதிர்கொள்ளத் தயாராக இருந்தேன். 

அவர் சொன்ன மறுநாளே புதுதில்லி அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் ஒரு செய்தி வந்தது. மேலாளர் தொலைபேசியை என்னிடம் கொடுத்து அவர்கள் பேசுவதைக் கேட்டு, சுருக்கெழுத்தில் குறித்துக்கொண்டு, அதனைத் தட்டச்சிட்டு வரும்படிக் கூறினார். டெல்லியிலிருந்து வந்த, ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஒருவர் தொலைபேசியில் பேசிய அலுவலகச் செய்தியை அப்படியே உள்வாங்கிக்கொண்டு சுருக்கெழுத்தில் எழுதி, (தெரியாத, புரியாத இடங்களில் புள்ளி வைத்தும், இடைவெளிவிட்டும் சமாளித்து) அதனை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தேன். மேலாளர் அதனைப் பார்த்துத் திருத்தித் தரவே மறுபடியும் அதனைத் தட்டச்சிட்டேன். அவர் என்னுடைய முதல் முயற்சியை அதிகம் பாராட்டினார். 

அவ்வாறே கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் நேர்முகத்தேர்விற்குச் சென்றபோது வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றேன். பம்பாயிலிருந்து வந்த அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார். அவ்வப்போது இந்தியிலும் பேசினார். எதிர்கொள்ள சற்றே சிரமப்பட்டாலும், சமாளித்து விடையளித்தேன். வந்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்டோரில் மூவரைத் தேர்ந்தெடுத்தனர். அம்மூவரில் என்னை முதலாவதாகத் தெரிவு செய்து தலைமையலுவலகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியாற்ற ஆணை தந்தனர். மற்ற இருவரும் கேரளாவிற்கும், ஆந்திராவிற்கும் சென்றனர். வந்திருந்தோரில் இந்தி மொழியறிவு, ஆங்கிலத் தட்டச்சு, ஆங்கிலச் சுருக்கெழுத்து ஆகிய தகுதிகளுடன் நான் மட்டுமே இருந்ததாகக் கூறினர்.  ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள, நான் நேர்முகத்தேர்வினை எதிர்கொண்ட, அதே அலுவலகத்தில் பின்னர் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினேன். 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சோழ நாட்டில் பௌத்தம் (1999) என்ற தலைப்பில் நான் மேற்கொண்ட முனைவர்ப் பட்ட ஆய்விற்காக  இந்திய, வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலிருந்து நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளின் ஒளிப்படங்களைக் கேட்டு ஆங்கிலத்தில் நான் கடிதம் எழுதியபோது சில அருங்காட்சியகத்தார் இந்தியில் மறுமொழியினை அனுப்பியிருந்தனர். எப்போதோ நான் கற்ற இந்தி அப்போது எனக்குப் பெரிதும் உதவியது.  அதனடிப்படையில் அவர்களிடமிருந்து பெற்ற நாகப்பட்டின புத்தர் சிற்பங்கள் தொடர்பான விவரங்களை என் ஆய்வேட்டில் இணைத்தேன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு வட இந்தியாவிலுள்ள கோயில்களுக்குச் சென்றபோது பெயர்ப்பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகள் தொடங்கி அனைத்து இடங்களிலும் இருந்த இந்தி எழுத்துகளை மிக எளிதாகப் படிக்கவும், புரிந்துகொள்ளவும் பெரிதும் உதவியது. சுமார் 20 பேர் கொண்ட குழுவில் நானும், எங்களை அழைத்துச்சென்றவரும் மட்டுமே இந்தி அறிந்திருந்தோம். 

தற்போதெல்லாம் அவ்வப்போது இந்தி செய்தியினைக் கேட்கிறேன். ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. தெரியாத சொற்களுக்கு, ஆரம்பத்தில் ஆங்கில நாளிதழை வாசித்தபோது பயன்படுத்திய உத்தியின் அடிப்படையில், அகராதிகளை நாடுகின்றேன்.  1977இல் கற்க ஆரம்பித்து, பிரவேஷிகா வரை கற்றபோதிலும் அரிதாகப் பயன்படுத்துவதால் சற்று சிரமம் இருப்பதை உணர்கிறேன். இருப்பினும் நான் அப்போது கற்ற இந்தி அவ்வப்போது கைகொடுப்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்.  

ஆரம்பத்தில் திண்ணையில் நான் கற்ற இந்தியானது தொடர்ந்து கும்பகோணம் காந்தியடிகள் நற்பணிக்கழகத்தின் மூலமாக   பிரவேஷிகா வரை தேர்ச்சியடையவும், பணிக்காலத்தில் பல நிலைகளிலும், ஆய்வின்போதும் பெரிதும் உதவியது. இந்நாளில், அப்போது எனக்குக் கற்பித்த திண்ணை இந்தி வகுப்பு ஆசிரியரையும், காந்தியடிகள் நற்பணிக்கழகத்தின் பாலுஜி அவர்களையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன். 

20 மே 2025இல் மேம்படுத்தப்பட்டது.

14 May 2025

சோழநாட்டு நடுகற்கள் (மன்னு பெரும் முன்னோர் மரபு) : வே.பார்த்திபன்

வே. பார்த்திபன் எழுதியுள்ள சோழநாட்டு நடுகற்கள் (முன்னு பெரும் முன்னோர் மரபு)  என்னும் நூல்  திருச்சிராப்பள்ளி மாவட்ட நடுகற்கள் மற்றும் தொல்லியல் சின்னங்கள், பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட  நடுகற்கள், தஞ்சாவூர்-திருவாரூர்-நாகப்பட்டினம்-கடலூர்-மயிலாடுதுறை மாவட்ட நடுகற்கள், கரூர்-புதுக்கோட்டை எல்லைப்பகுதி நடுகற்கள், சேலம்-நாமக்கல் எல்லைப்பகுதி நடுகற்கள் என்னும் உட்தலைப்புகளையும், உரிய ஒளிப்படங்களையும் கொண்டு அமைந்துள்ளது.



நடுகற்கள் அமைந்துள்ள இடம், அவ்விடத்தின் சிறப்பு, நடுகற்களின் காலம், உருவ அமைப்பு ஆகியவற்றை இலக்கியச் சான்றுகள், புராண வரலாற்றுச்செய்திகள், கல்வெட்டு அறிக்கைகள், முந்தைய ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள், நூலாசிரியரால் கண்டுபிடிக்கப்பட்டவை, கண்டுபிடிப்பு பற்றிய நாளிதழ் நறுக்குகள் என்ற வகையில் தெளிவான புரிதலுடன் ஒவ்வொரு நடுகற்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைப்பதோடு, மேற்கோள் காட்டல், தகவலாளர்களுக்கு நன்றி கூறல் போன்ற நெறிமுறைகளையும் நூலாசிரியர் கடைபிடித்துள்ளார். கிடைக்காத சிற்பத்திற்கு அதன் மைப்படியை வைத்து விவாதிக்கிறார். நடுகல்லின் தோற்றுவாய், சோழநாட்டு நடுகற்கள் மரபு என்ற தலைப்புகளில் நூலுக்கான பின்புலத்தை ஆராய்கிறார். 

நூலாசிரியர், ஜி.பி.எஸ்.தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவிதம் இந்நூலின் சிறப்புக்கூறாக உள்ளது. நூலிலிருந்து சில நடுகற்களைப் பற்றிக்காண்போம்.

….பொதுவாக நடுகல் போர்க்குடிகளும், வனவிலங்கிலிருந்து ஊரைக் காத்த வேட்டுவ, வேளாண் குடிகளும் எழுப்புவர். முதன்முதலாய் பிராமணர் ஒருவரக்கு இந்நடுகல் (நன்னிமங்கலம் நடுகல்) எழுப்பப்பட்டுள்ளது. அவ்வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. (ப.59)

…திருச்சி மாவட்டம் இரட்டமலையில் வேட்டை கருப்பர் நடுகல் உள்ளது.  குதிரையைக் காவு கொடுத்த வேட்டன் மதிரை இன்று வேட்டைக்கருப்பாக வணங்குவதைக் காணமுடிகிறது.…இதுபோன்ற போர்க்கருவிகள் சூழ குதிரையுடன் கூடிய நடுகல் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. (ப.65)

…வீரனின் முழு உருவமும், முழுக்கச் சிதைந்துள்ளதால் நீண்ட நேரம் உற்றுப் பார்த்தே அடையாளம் காண வேண்டியுள்ளது. அப்பகுதி மக்கள் இவ்வீரனின் உருவமும், பெயரும் அறியாததால் இவரை பெண் தெய்வம் எனக் கருதி செல்லாண்டியம்மன் என்ற பெயரில் வழிபடுகின்றனர். (ப.70)

….தமிழகத்தின் பல இடங்களில் கேட்பாரற்றும, புறக்கணிக்கப்பட்டும், தெருவில் வீசியும், குப்பைக்கூளங்கள் மத்தியில் கிடக்கும் நடுகல் சிலைகளைப் பார்த்ததுண்டு. ஆனால் ஒரு நடுகல்லிற்கு கோவிலெழுப்பி வழிபாடு செய்யும் இவ்வூரார் (ஸ்ரீராமசமுத்திரம்) போற்றத்தக்கவராவர். (ப.107) 

….அவ்வூரில் (நத்தம்) ஒரு நம்பிக்கை. அங்கு ஒரு கற்சிலை உண்டு. என்ன சிலையென்று ஊரார் அறிந்திருக்கவில்லை. இச்சிலை எப்போதும் கவிழ்ந்தே கிடக்கும். ஊரில் தண்ணீர் பஞ்சம் வரும்போது இச்சிலையை பிரட்டி விடுவர். அன்று மழை பெய்யுமாம். மறுபடியும் வெள்ளக்காடாய் ஆனதும், மீண்டும் அச்சிலையைக் கவிழ்த்துவிடுவார்கள்….(ப.113)

…குத்துக்கற்கள் நட்டு வைக்கப்பட்ட திறந்த வெளியே அவ்வா தாத்தா கோயில் எனப்படுகிறது. பெரும் குத்துக்கல் தாத்தா எனவும், ஒன்றரை அடி உயரத்துடன் வணங்கிய நிலையில் உள்ள பெண் சிற்பம் அவ்வா (பாட்டி) எனவும் வழங்கப்படுகின்றன. பிற குத்துக்கற்கள் முன்னோர்களாகக் கருதப்பட்டு வணங்கப்படுகின்றன. (ப.145)

…கும்பகோணம், சார்ங்கபாணி கோவிலின் தேர்முட்டியில் உள்ள அரிகண்ட சிற்பம், தேரினை வலம் வர செய்ய தன்னுயிரை நீத்தவரைக் குறிக்கிறது. தேர் நின்று போகாமலும், நல்லபடியாக வலம் வரவும், அவ்வாறு நகர்ந்து வரும்போது நேர்த்திக்கடனாகச் சிலர் தம் இன்னுயிரை பலியிட்டுக் கொண்ட சம்பவம் நிகழ்ந்ததுண்டு.  (ப.170)

களப்பணியின்போது பதிவு செய்யப்படாத புதிய நடுகற்கள் சுமார் 25க்கு மேல் கண்டறிந்துள்ளதாக நூலாசிரியர்  குறிப்பிடுகிறார். முழு ஈடுபாட்டோடு குறிப்பிட்ட ஒரு துறையில் பயணித்து வரலாற்றுக்குப் பெரும் பங்களித்துள்ள முயற்சி போற்றத்தக்கது. சோழ நாட்டில் உள்ள நடுகற்கள் குறித்து  தனித்துவமான நூலை உருவாக்கிய நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

தலைப்பு : சோழநாட்டு நடுகற்கள்  (மன்னு பெரும் முன்னோர் மரபு)   
ஆசிரியர் : வே.பார்த்திபன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 050 தொலைபேசி 044-26251968/26258410
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, ஏப்ரல் 2025
விலை : ரூ
.180

12 May 2025

வேலைக்கு முதல் விண்ணப்பம் 12 மே 1976

“படிக்காட்டி முச்சந்தியில்தான் நிப்பே, படி” என்று கும்பகோணத்தில் வீட்டில் எங்கள் தாத்தா அடிக்கடி கூறுவார். எப்போதாவது அன்பாகவும் அறிவுரை சொல்வார். இவை சொந்தக்காலில் நிற்கவேண்டும், நேர்மையாக நடக்கவேண்டும், நல்ல பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்கவேண்டும் என்பன போன்ற எண்ணங்களை பள்ளிக்காலத்தில் விதைத்தது. 


மார்ச் 1975இல், கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவினை எதிர்பார்த்த நேரத்தில் வீட்டுச்சூழல் காரணமாக வேலையில் சேரவேண்டிய கட்டாயம் இருந்தது.  எந்நேரத்திலும் வேலையில் சேரத் தயாராக வேண்டும் என்ற இலக்கினை மனதில் கொண்டேன்.

2017இல், நான் படித்த பள்ளியின் நுழைவாயிலில்

அதற்காக என்னை ஆயத்தப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின் விடுமுறையில் கும்பகோணம், ஈஸ்வரன் தட்டச்சுப் பயிற்சி நிலையத்திலும், தொடர்ந்து பாரத் தட்டச்சுப் பயிற்சி நிலையத்திலும் ஆங்கிலத் தட்டச்சுக் கற்க ஆரம்பித்தேன். அதற்கு சற்று முன்பாக இந்தி பிராத்மிக் சேர்ந்து கற்க ஆரம்பித்திருந்தேன். கல்லூரிப் படிப்பைவிட இவை போன்ற கூடுதல் தகுதிகள் பணியில் சேருவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நண்பர்கள் கூறினர்.  அவ்வாறு நான் கற்ற ஆங்கிலமும், இந்தியும் பின்னாளில் நான் பணியில் சேர்ந்தபோது மிகவும் உதவின. அதே காலகட்டத்தில் நான் ஆங்கில இந்து நாளிதழ் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஏப்ரல் 1975இல் நடைபெற்ற தேர்வில் 600க்கு 311 மதிப்பெண்கள் பெற்று எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்ச்சி பெற்றேன். கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பி.யு.சி. சேர்ந்துபடிக்கவேண்டும் என்ற ஆசை என் மனதுள் ஓடிக்கொண்டிருந்தது.  படிக்க வசதியில்லை என்று கூறி, எங்கள் வீட்டில் என்னை கும்பகோணம், பெரிய தெருவிலுள்ள இருளப்பன் மிளகாய் மண்டியில் சேர்த்துவிட்டார்கள். என்னுடன் பள்ளியில் படித்த பல மாணவர்கள் கல்லூரியில் பி.யு.சி. சேர்ந்து படிக்கவிட்டார்கள்.  தொடர்ந்து மிளகாய் மண்டியில் வேலை பார்த்துவந்தேன். கல்லூரிக்குச் சென்ற நண்பர்களைப் பார்த்ததும் படிக்கும் ஆசை அதிகமானது. வீட்டைவிட்டு ஓடிவிடுவேன், காவிரியாற்றில் விழுந்துவிடுவேன் என்றெல்லாம் வீட்டிலுள்ளோருக்குப் பலவகையில் தொந்தரவு கொடுத்து பி.யு.சி.யில் சேர்ந்தேன். 

சேர்வதற்கு முன்பாக சிலர் தஞ்சாவூர் வேலை வாய்ப்பகத்தில்  பதிந்துவிட்டால் வேலை கிடைக்கு வாய்ப்புண்டு என்று கூறினர். அதன்படி வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்தேன். 1975இல் பதிவு செய்தபின்னர் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நேரில் சென்று புதுப்பித்துக்கொண்டேயிருந்தேன்.

கும்பகோணம் கல்லூரியில் பி.யு.சி. சேர்ந்து, மார்ச் 1976இல் நடைபெற்ற தேர்வில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். பின்னர் பி.ஏ. பொருளாதாரம் படித்ததும், வேலைக்குச் சேர்ந்ததும் தனிக்கதை.


பி.யு.சி. தேர்வெழுதி, தேர்வு முடிவிற்காகக் காத்திருந்தபோது வேலைக்கு விண்ணப்பங்கள் அனுப்ப ஆரம்பித்தேன்.  அவ்வாறாக முதன்முதலாக நான் தட்டச்சு செய்து அனுப்பிய விண்ணப்பத்தின் நகல் (கார்பன் காப்பி) இன்னும் என் கோப்பில் இருந்துகொண்டு, அந்நாள்களை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்பு, ஏக்கம் என்ற பல நிலைகளில் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை தொடர்ந்தது. சுமார்  50 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நான் எதிர்கொண்ட முதல் தட்டச்சு அனுபவம் வித்தியாசமானது. 17 வயதில் நான் தட்டச்சிட்ட கடிதம் இன்னும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. ஃபூல்ஸ்கேப் அளவுள்ள இரு தாள்களுக்கு இடையே அதே அளவு கார்பன் பேப்பரை ஆங்கிலத் தட்டச்சுப்பொறியில் வைத்து 1+1 தட்டச்சு செய்தேன். ஆசிரியர்களிடமும், சக நண்பர்களிடமும் கடிதத்திற்கான வரைவினைப் பற்றி அறிந்தேன். ஆங்கிலத்தட்டச்சுத் தேர்விற்காக நான் தட்டச்சிட்ட இரண்டாம் தாள் (I Paper Speed, Second Paper: Letters & Others) மூலமாக கடித அமைப்பைத் தெரிந்துகொண்டேன். அப்போதெல்லாம் ஏ4 அளவு தாள் பயன்பாடு கிடையாது.  கூகுளும் கிடையாது. 

பத்தியின் முதல் வாக்கியத்திற்கு அதிக இடைவெளிவிட்டது (ஐந்து எழுத்து இடைவெளி அல்லது ஒரு டேப் போதும்), எழுதிய சொற்கள் (“Having come to understand…”, “…abovesaid Factory, “…your Honour’s control”, ”Dear” என்பதற்குப் பதிலாக ”Respected”), வேலை வாய்ப்பக எண்ணைத் தந்தால் உடன் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அந்த எண்ணைப் பதிவு செய்தல் போன்ற உத்திகளைக் கடிதத்தில் பயன்படுத்தியதைப் பார்க்கும்போது எனக்கு வியப்பாக உள்ளது. எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறேன் என்றோ, முடித்திருந்த பி.யு.சி. தேர்ச்சி, தட்டச்சு அறிவு போன்ற தகுதிகளையோகூட நான் குறிப்பிடவில்லை. அப்படியிருந்தும், முதன்முதலாக நண்பன் வேலைக்காக தட்டச்சிட்ட கடிதம் என்ற வகையில் நண்பர்களும், தட்டச்சு நிறுவனத்தினரும் அதிகம் பாராட்டினர்.  அன்று முதல் இன்றுவரை தட்டச்சினை நான் ஒரு கலையாகவே கருதி வருகிறேன்.

தாத்தா, ஆத்தா, பெற்றோர், வளர்த்தவர்கள் ஆரம்ப காலத்தில் போட்ட வித்தானது படித்து முடித்து வேலையில் சேர்ந்தது முதல் என்னை பல வழிகளில் நன்னெறியில் நடத்திச்சென்றதை உணர ஆரம்பித்தேன். நான் பெற்ற இந்தப் பாடமே பின்னர் என் மகன்களை வாழ்வில் மூன்று Dக்கள் (Discipline, Decency மற்றும் Decorum) இருக்கவேண்டும் என்று கூறி வளர்க்க உதவியாக இருந்தது. வளரும் காலத்தில் தரப்படுகின்ற முக்கியத்துவம் வளர்ப்பவர்களுக்கு பெருமை சேர்ப்பதோடு, பிள்ளைகளை நன்னெறிக்கு இட்டுச்செல்லும்.

இன்னும் பாதுகாத்து வருகின்ற அதன் நகலைப் பார்க்கும்போதெல்லாம் நண்பர்களுடன்  அரட்டையடித்த நாள்களும்,  அதனை அனுப்பிவிட்டு பணி ஆணைக்காக தபால்காரரை எதிர்பார்த்த நாள்களும், கும்பகோணம், கே.ஜி.கே.தெருவின் அழகான எங்கள் வீடும் நினைவிற்கு வந்துவிடும்.