29 July 2017

வானமே எல்லை : அன்னி திவ்யா

விஜயவாடாவைச் சேர்ந்த அன்னி திவ்யா (வயது 30) தன் கனவுகளை நினைவாக்க அதிகம் உழைக்க வேண்டியிருந்தது. இளம் பருவத்திலிருந்தே எனக்கு ஒரு விமான ஓட்டியாக ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அவ்வாறு ஆவதற்கான வழிமுறைகள் என்னவென்று எனக்குத்தெரியாது”  என்று கூறும் அவர் போயிங் 777 விமானத்தின் உலகிலேயே முதன்முதலாக இளம் பெண் கேப்டன்களில் ஒருவர் என்று பாராட்டப்பெறுகிறார். அவரைச் சந்திப்போம்.


எனக்கு 737 ஓட்ட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் 777ஐ ஓட்டவே ஆசைப்பட்டேன். அந்த நன்னாளுக்காக நான் அதிகம் காத்திருக்க வேண்டியதாயிற்று என்று கூறும் அவர் மற்ற பெண்கள் தாம் நினைத்தைச் சாதிக்கும் முயற்சியிலும், தம் கனவுகளை நனவாக்கும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.

அன்னி பிறக்கும்போது அவளுடைய குடும்பம் பதன்கோட்டின் அருகேயுள்ள படைத்தளத்தில் இருந்தது. படை வீரராக ராணுவத்தில் பணியாற்றிய அவருடைய தந்தை நாடெங்கும் பல இடங்களில் பல பிரிவுகளில் பணியாற்றிவிட்டு, 19 வருட பணிக்குப் பிறகு விருப்ப ஓய்வு பெற்று விஜயவாடாவில் தங்கினார்.  அன்னியின் அம்மாவுக்கு தன் மகள் வளரும்போது ஒரு பைலட்டாக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்போதைக்குக் கற்பனைக்கெட்டாதது. அதற்கான வாய்ப்பையும் எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற வழியும் தெரியாத நிலை. அருகிலுள்ளோர் எள்ளி நகையாடினர். அம்மா தன் கனவை மகளிடம் வெளிப்படுத்த, மகளுக்கு அந்த இளம் வயதில் அந்த எண்ணம் துளிர்க்க ஆரம்பித்தது.

நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு படித்த வரை அன்னி சாதாரண மாணவியாகவே இருந்தார். அவர் 100 மதிப்பெண் வாங்கினாலும் சரி, சுழியம் வாங்கினாலும் சரி, அம்மா ஒன்றும் சொல்ல மாட்டார்களாம். அதுவே அவரை முன்னுக்கு வர வாய்ப்பு தந்தது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அவருடைய ஆசிரியர்களில் ஒருவர், அன்னி சாதிக்க விரும்புவதைப் பற்றிக் கேட்டபோது அன்னி தான் சாதிக்க விரும்புவதாக சமஸ்கிருதம் கற்றல், சட்டம் படித்தல், இசை பயிலுதல், நடனம் கற்றுக்கொள்ளல் போன்ற 10 இலக்குகளைக் கொண்ட விருப்பப்பட்டியலைத் தயாரித்தார். அவளுடைய இலக்குகளில் பைலட்டாக ஆக வேண்டும் என்பது முதல் இலக்காக இருந்தது. அன்னியால் அதனைச் சாதிக்க முடியாது என்று கூறி பலர் கேலி செய்தார்கள். ஆனால் அவர் அலட்டிக்கொள்ளவில்லை.  தாங்கள் என்னவாக வர ஆசைப்படுகின்றீர்கள் என்று மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார். மற்ற மாணவர்கள் பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், பிற தொழில் வல்லுநர்களாகவும் ஆக விரும்புவதாகக் கூறினர்.  அன்னி, வகுப்பில் நிமிர்ந்து நின்று தான் ஒரு பைலட்டாக ஆகவேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது. அனைவரும் வியந்து நோக்கினர். 


அன்னி 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, பைலட்டாக ஆவதற்கு 90 விழுக்காடு மதிப்பெண் தேவை என்று யாரோ கூறவே (உண்மை அதுவல்ல என்று பின்னர்தான் அறிந்தார்) பெரும்பாலான பாடங்களில் 100 விழுக்காடு பெற்றார். ஆங்கிலத்தில் 92 விழுக்காடும், சமஸ்கிருதத்தில் 98 விழுக்காடும் பெற்றார். 12ஆம் வகுப்பில் நன்கு படித்து தேர்ச்சி பெற்று மற்ற மாணவிகளுக்கு வகுப்பெடுக்கும் நிலைக்கு உயர்ந்தார்.

12ஆம் வகுப்பு நிறைவு செய்த பின் பெற்றோர் அவரை பொறியாளர்களுக்கான தேர்வினை எழுதும்படி கூறினர். ஆனால் அன்னிக்கு அதில் உடன்பாடில்லை. வேறுவழியின்றி விஜயவாடாவிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். உரிய கட்டணங்கள் செலுத்தினார். விருப்பமின்றி வகுப்புக்குச் சென்றார். ஆனால் பெற்றோரிடமும், மற்றவர்களிடமும் தான் ஒரு பைலட்டாக ஆவப்போவதாகவே கூறிவந்தார். 
இந்திரா காந்தி ராஷ்ட்ரிய ஊரன் அகாதெமியிலுள்ள விமானப் பயிற்சிப்பள்ளியின் விளம்பரத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு விண்ணப்பிக்க முன்பெல்லாம் ஆரம்ப கால பறக்கும் அனுபவம் தேவையாக இருந்தது. தற்போது பறக்கும் அனுபவம் தேவையில்லை என்று அறிந்த அவர் அதற்கான தேர்வை புதுதில்லியில் எழுத விரும்பினார். தந்தையோ அந்த அளவிற்கு செலவு செய்யமுடியாது என்றார்.  தாயாரும் சகோதரியும் அவளுடைய விருப்பத்திற்கு ஆதரவு தந்தனர். கிட்டத்தட்ட இரண்டு நாள்கள் புகைவண்டிப்பயணம் புதுதில்லிக்கு நின்றுகொண்டே, முன்பதிவின்றி. 

தேசிய அளவிலான அத்தேர்வில் 30 பேரே தேர்ந்தெடுக்கப்படுவர். நுழைவுத்தேர்விலும், நேர்முகத்தேர்விலும் தேர்ச்சி பெற்ற நிலையில் அன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்வுகளுக்காக பெற்றோர் அவளுடன் உத்திரப்பிரதேசத்திலுள்ள ராய் பெரேலிக்குச் சென்றனர். தொடர்ந்து விஜயவாடாவில் நடைபெற்ற நேர்முகத்தேர்வின்போது அவருடைய 11ஆம் வகுப்பு ஆசிரியர் உடன் சென்றார்.

இச்சூழல் அவருடைய பெற்றோரின் மனதை நெருட வைக்க, அவர்கள் அவருடைய விருப்பத்திற்கு இசைவு தெரிவித்தனர்.  வங்கியிலிருந்தும், உறவினர்களிடமிருந்தும் ரூ.15 இலட்சம்  கடன் பெற்றார். பயிற்சி தொடங்கியது. 2 வருடங்கள் மூன்று மாதங்கள். பயிற்சிக்காலத்தில் ஆங்கில உச்சரிப்பு மற்றும் புரிதலை மேம்படுத்திக்கொண்டார். 17 வயதில் விமானப்பள்ளியில் சேர்ந்த அவர் தன் 19 வயதில் பயிற்சியை நிறைவு செய்தார்.

அவருக்கு தெலுங்கும் இந்தியும் பேசத்தெரியும். ஆங்கிலத்தில் படிக்கவும் எழுதவும் தெரியும், ஆனால் அருகிலுள்ளோர் யாரும் பேசாத நிலையில் பள்ளிக்காலத்தில் அவரால் ஆங்கிலம் பேச முடியவில்லை. சொல்  உச்சரிப்பின்போது அதிகம் சிரமப்பட்டுள்ளார். அப்போது அவரை பலர் கேலி செய்துள்ளனர். அவர் எதையும் பெரிதுபடுத்தாமல்  முன்னுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து பேசினார், செயல்பட்டார்.  மொழியில் இருந்த குறையும் அவரை விட்டு நீங்கியது.

பண்பாட்டுச்சிக்கலையும் அவர் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. கிராமத்துப் பின்னணியில் வளர்ந்த அவர் தில்லியிலும் மும்பாயிலும் இருந்து பயிற்சிக்கு வந்திருந்த சக நண்பர்களிடம் பழக வேண்டியிருந்தது. மொழி தொடர்பாக அவரைப் பலர் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.  தவிரவும் அவர்களுடைய வித்தியாசமான நகைச்சுவை உணர்வு அன்னிக்கு ஏற்றதாக அமையவில்லை. இருந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் மன தைரியத்தை வளர்த்துக்கொண்டார். பயிற்சிக்காலத்தில் விடுமுறையின்போதுகூட அவர் தன் சொந்த ஊருக்குச் செல்லவில்லை. போக்குவரத்துச் செலவு ஒரு புறமிருக்க, அதே காலகட்டத்தில் பயிற்சிக்கூடத்தில் இருந்தால் மென்மேலும் கற்றுக்கொள்ளலாம் என்ற விருப்பமும் அதற்குக் காரணமாகும். பெரும்பாலான அவருடைய நண்பர்கள் விமானத்தில் பணிபுரியும் கேப்டனின் பிள்ளைகளாக இருந்தனர். அவளுக்கு இவ்விதப் பின்புலம் இல்லாத நிலையை எதிர்கொள்ள விடுமுறைக்கால கூடுதல் பயிற்சி உதவியது. அவருடைய இந்த முயற்சி அவர் பயிற்சியில் அனைவரையும்விட முன்னுக்கு வர வைத்ததோடு, பிறர் பொறாமைப்படும் அளவு ஆக்கியது. பயிற்சியின்போதான உழைப்பு அவர் பயிற்சிக்கான உதவித்தொகையை பெறவும் உதவியது.  
  
19 வயதில் பயிற்சியை முடித்த அவருக்கு 2006இல் எர் இந்தியாவில் தகுதி அடிப்படையில் வேலை கிடைத்தது. பணியில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்தார். தொடர்ந்து எர் இந்தியாவில் பணியாற்றும்போதே பி.எஸ்.சி. (ஆகாய விமானம் ஓட்டுதல்) பட்டம் பெற்றார். பயிற்சி பெறுவதற்காக ஸ்பெயினுக்குச் சென்றார். முதன்முதலாக வெளிநாட்டுப் பயணம் அதுவே. தன் ஊதியத்தின் ஒரு பகுதியை, முன்னர் வாங்கியிருந்த கடனை அடைத்தார். ஆஸ்திரேலியாவில் படித்த தன் சகோதரர்களுக்கும்,  அமெரிக்காவில் படிக்கும் தன் சகோதரிக்கும் பண உதவி செய்துள்ளார்.  அவருடன் பணியாற்றுபவர்கள் சொத்து வாங்கும்போது இவர் தன் சம்பாத்தியத்தை தன் உடன் பிறந்தோரின் படிப்புக்காகச் செலவிட்டுள்ளார். பெற்றோருக்காக வீடும் வாங்கினார்.  


இலண்டனில் உலகின் பெரிய விமானமான போயிங் 777இல் பறந்து சாதனை படைத்தார்.  அவர் இயக்குகின்ற போயிங் 777 மிகப்பெரிய விமானமாகும். உலகிலேயே இளம் வயதில் போயிங் 777 விமானத்தை இயக்கும் பெண்மணி என்ற பெருமையைப் பெற்று தன் இலக்கினை அடைந்துள்ளார்.  நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களுக்கு தொடர்ந்து விமானம் ஓட்டிக்கொண்டிருக்கிறார் இந்த வீராங்கனை.

எர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அலுவலரும் அவருடைய வழிகாட்டிகளில் ஒருவரும் அவரைப் பாராட்டுகிறார். "அன்னி மிகத் திறமையானவர். அவ்வாறு ஒரு நிலைக்கு வர அவர் கடினமாக உழைத்துள்ளார் என்கிறார். பயிற்சிக்காலத்தின்போது மற்ற அனைவரையும்விட முன்னுக்கு வந்தவர்". தன் விடாமுயற்சியாலும், மன உறுதியாலும் சாதித்துக்கொண்டிருக்கும் அன்னியைப் பொறுத்தவரை வானமே எல்லை.

துணை நின்றவை: