10 December 2015

கும்பேஸ்வரர் கோயில்

கும்பகோணத்தில் மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் 12 சைவக்கோயில்களில் கும்பேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். தீர்த்தவாரி கோயில்களில் இதுவரை ஏழு கோயில்களைப் பார்த்துள்ள நிலையில் அடுத்த கோயிலான கும்பேஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம்.

17.10.2015 அன்று நவராத்திரியை முன்னிட்டு கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோயிலுக்கு நானும் என் மனைவியும் சென்றோம். 

மூன்றாம் பிரகாரத்தில் வன்னி மரம், முன்பாக விநாயகர். இப்பிரகாரத்தில் கும்ப முனிவர், விநாயகர். இரண்டாம் பிரகாரம் செல்லும் முன்பாக முற்றவெளி விநாயகர், பாலதண்டாயுதபாணி சன்னதி. நுழைந்ததும் வலப்புறம் லட்சுமிநாராயணப் பெருமாள் சன்னதி. கொடி மரம், நந்தி, பலிபீடம்.  அடுத்த கோபுரம் வாயிலாகச் செல்லும்போது நிலைக்காலில் பௌத்தம் இப்பகுதியில் தழைத்திருந்தமைக்கான கல்வெட்டு. முதல் பிரகாரத்தில் அறுபத்துமூவர். தொடர்ந்து நடராஜர், விநாயகர், சுப்பிரமணியர், வீரபத்திரர் உள்ளிட்ட பலர் உள்ளனர். தென்மேற்குப் பகுதியில் வலஞ்சுழி விநாயகர், பிட்சாடனர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர். அன்னபூரணி, கஜலட்சுமி, மகாலட்சுமி,  சரசுவதி. வடக்குப் பிரகாரத்தில் மங்களாம்பிகை சன்னதி. வாயிலின் இரு புறமும் ஜெயா, விஜயா.  கோயில் வளாகத்தில் அமைந்துள்ள குளத்தின் அருகே சட்டநாதர் சன்னதி. கோயிலை வலம் வந்த நாம் நவராத்திரி கொலுவைப் பார்ப்போம்.  


1970களின் இடையில் பள்ளிப்பருவம் தொடங்கி கல்லூரிப்பருவம் வரை கும்பகோணத்தில் நவராத்திரியின் போது நண்பர்களுடன்  கும்பகோணத்திலுள்ள கோயில்களுக்குச் செல்வது வழக்கம். பின்னர் பல முறை மகன்களுடனும், மனைவியுடனும் சென்றுள்ளேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் 40 வருடங்களுக்கு முன்பாக முதன்முதலாக நண்பர்களுடன் கோயில்களைச் சுற்றி வந்தது நினைவிற்கு வரும். இம்முறையும் அப்படியே. மகாமகத்திற்காக தீர்த்தவாரி காணும் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.







மூலவராக கும்பேஸ்வரர் உள்ள இக்கோயிலில் உறையும் இறைவி மங்களாம்பிகை. இக்கோயில் குடமுழுக்கு 5.6.2009 அன்று நடைபெற்றுள்ள நிலையில் மகாமகத்திற்காக குடமுழுக்கு நடைபெறும் கோயில் பட்டியிலில் இக்கோயில் இடம்பெறவில்லை. ஆங்காகே சில திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மகாமகத்திற்காக குடமுழுக்கு நடைபெறும் கோயில் பட்டியிலில் இக்கோயில் இடம்பெறவில்லை. ஆங்காகே சில திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மின்னொளி அலங்காரத்தில் கோயில் மிக அழகாக இருந்தது. முதன்மை வாயிலைக் கடந்து கொடி மரத்தின் அருகில் நின்று வணங்கிவிட்டு உள்ளே சென்றோம். 


வலப்புறம் தொடங்கி வரிசையாக ஆங்காங்கே ஆளுயர கொலு பொம்மைகளைக் கண்டோம். புராணக்கதைகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் சித்தரிக்கும் பொம்மைகள் இயற்கையாகவே  இருந்தன.




அழகாக அமைக்கப்பட்டிருந்த  இந்திர சபையினைக் கண்டோம். இளம் வயதில் பார்த்தபோது இருந்த இன்பத்தை இப்போதும் உணர முடிந்தது.
நவராத்திரி கொலுவைப் பார்த்துக்கொண்டுவரும்போது நெட்டியால் ஆன மகாமகக்கோயில் அமைப்பைப் பார்த்தோம். மிகவும் அழகாக இருந்தது.உள்ளே கொலுவின் அழகினைப் பார்த்துவிட்டு மூலவரையும், மங்களாம்பிகையையும் தரிசனம் செய்துவிட்டு, ராஜ கோபுரத்தினைக் கடந்து சன்னதிக்கு வந்தோம். சன்னதியில் இருந்த கடைகளில் நவராத்திரி கொலு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். எத்தனை முறை பார்த்தாலும் மகிழ்ச்சியைத் தருகின்ற அந்த கொலு பொம்மைகளை பார்க்கப்பார்க்க ஆசையாக இருந்தது. கிளம்ப மனமின்றி அங்கிருந்து கிளம்பினோம்.








அடுத்த களப்பணியின்போது எடுத்த புகைப்படங்கள் இதோ. நான்கு வாயில்களும், தூண் மண்டபமும், குளமும் இவற்றில் உள்ளன.















---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
துணை நின்றவை
புலவர் கோ.மு.முத்துசாமிப்பிள்ளை,  கும்பேசுவரர் கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992

17.1.2016இல் மேம்படுத்தப்பட்டது.