16 December 2015

சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

பிப்ரவரி 2016இல் மகாமகம் நடைபெறவுள்ள நிலையில் மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் 12 சைவக் கோயில்களில் இதுவரை எட்டு கோயில்களுக்குச் சென்றுள்ளோம். இப்போது ஒன்பதாவது கோயிலுக்குச் செல்வோம்.

பிற கோயில்களுக்குச் சென்றதைப் போலவே இக்கோயிலுக்கும் குடமுழுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நவம்பர் 2, 2015 அன்று நடைபெற்ற இக்கோயிலின் குடமுழுக்கினைக் காணச் சென்றேன். தஞ்சாவூரிலிருந்து பேருந்தில் கும்பகோணம் சென்றேன். மொட்டை கோபுரத்தில் இறங்கி அங்கிருந்து நடந்து சோமேஸ்வரர் கோயிலுக்குச் சென்றேன். பொற்றாமரைக் குளத்தைக் கடந்து சென்றபோது மக்கள் கூட்டம் கூட்டமாகக் குடமுழுக்கினைக் காணச் சென்றதைக் காணமுடிந்தது.   

வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்போது எதிரில் உள்ள கடைகளில் இருந்து ஒருவர் எங்களது கடை மாடியில் ஏறிப்பாருங்கள், நன்றாகத் தெரியும் என்றழைக்கவே அவரது கடையில் ஏறி மாடியில் சென்று பார்த்தேன்.  


கோயிலின் வளாகம் தெரிந்தது. அங்கிருந்து ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு, அவரிடம் நன்றிகூறிவிட்டுத் தொடர்ந்து நடந்தேன். கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் உள்ள கோயிலின் வாயில் வழியாக யாரும் அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்து பார்த்துவிட்டு தொடர்ந்து நடந்து  முதன்மை வாயிலுக்குச் சென்றேன்.

ராஜகோபுரம் வாயிலாக உள்ளே சென்றேன். கொடி மரம், பலிபீடத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது யாகசாலையைப் பார்த்துவிட்டுச் சென்றேன். எங்கும் ஒரே கூட்டம். 

குடமுழுக்கு ஏற்பாடு ஆரம்பமான நிலையில் மறுபடியும் ராஜகோபுரம் தெளிவாகத் தெரியும்படி அருகேயுள்ள காந்தி சிலையின் முன்பாக நின்றுகொண்டேன். சில நிமிடங்களில் குடமுழுக்கு நிகழ்வினை பக்தர்களுக்குத் தெரிவிக்கும்வகையில் பச்சைக்கொடி காட்ட எங்கும் சிவ சிவா என்ற ஒலி ஒலித்தது. 





குடமுழுக்கு நிறைவுற்று தீபாராதனை காட்டப்பட்டபோது இறைவனை நினைந்து வணங்கிவிட்டு, கோயிலை நோக்கி உள்ளே சென்றேன்.  உள்ளே கட்டுக்கடங்காத கூட்டமாக இருந்த நிலையில் கொடி மரம் அருகே சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு பின்னர் இறைவன் சோமேசரையும், இறைவி சோமநாயகியையும் தரிசனம் செய்துவிட்டு மன நிறைவோடு வெளியே வந்தேன். 

கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் உச்சிபிள்ளையார் கோயிலுக்கு அருகே நகரின் மையப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 வரையிலும் இக்கோயிலின் நடை திறந்திருக்கும். மகாமகத்திற்கு முன்போ, பின்போ வாய்ப்பு கிடைக்கும் நாளில் கும்பகோணம் வாருங்கள், இக்கோயிலுக்கும் செல்லுங்கள்.   
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
துணை நின்றவை
மகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு